Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தமிழ்நாடு கவர்னர் மாறவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
CM-2 2025-06-16

Source: provided

தஞ்சாவூர் : கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த, நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மேட்டூர் அணையை குறித்த தேதியில் திறந்து வைத்துவிட்டு, நேற்று மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணையையும் திறந்திருக்கிறேன்.

இப்படி, மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் நேரில் வந்து திறந்து வைக்கும் முதலமைச்சர் நான் தான் என்று, முதல் முதலமைச்சராக பெருமைப்படுகிறேன். இதை இங்கு இருக்கக்கூடிய உழவர் பெருமக்களெல்லாம் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்… அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க, முக்கியமான அறிவிப்பை இங்கு வெளியிட விரும்புகிறேன்.

2021-22-ம் ஆண்டுமுதல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், 276 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களுக்காக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு 82 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதுமட்டுமல்ல - தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக, டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் 132 கோடியே 17 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கார் - குறுவை - சொர்ணவாரி பருவத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தையும் உழவர் பெருமக்களின் நலனுக்காக துவங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், சுமார் 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் இருக்கும் சுமார் 8 இலட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், 325 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரத்து 461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நாலாயிரத்து 127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அதுமட்டுமல்ல. இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 383 பேருக்கு 558 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்த விழாவில் வழங்கயிருக்கிறேன்

இந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு செய்தேன். அதன்பிறகு நானே தயங்கினாலும், அந்த பல்கலைக் கழகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்தான் வைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க. கட்சி மட்டுமல்ல, எல்லா கட்சியும் கட்சி வேறுபாடில்லாமல் எல்லோரும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகுதான் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால், தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கான அந்த சட்டத்துக்கு ஆளுநர் இப்போதுவரை ஒப்புதல் தரவில்லை. நாம் அனுப்பி வைத்தவுடன் அவர் ஒப்புதல் தந்திருந்தால், இன்றைக்கு (நேற்று) இந்த நிகழ்ச்சியிலேயே கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பேன். கடந்த மே 2 அன்று அனுப்பி வைத்தோம். 40 நாளுக்கு மேல் ஆனது. இன்னும் அனுமதி வரவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பார் என்று நினைத்தோம்… ஆனால், இன்னும் மாறவில்லை. கலைஞர் பல்கலைக்கழக மசோதா தொடர்பாக பலமுறை நாம் நினைவூட்டினோம். உயர் கல்வித் துறை அமைச்சரையும் “ஆளுநரை சென்று பாருங்கள்” என்று சொல்லியிருந்தேன். ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சரை சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். இன்னும் நேரம் தரவில்லை. தெரியும். நேரம் கொடுத்தால் ஏதேனும் கேட்பார்கள் என்று… அதற்கு பயந்துகொண்டு சந்திக்க மறுக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கும் ஒரே கேள்வி என்றவென்றால், ஓர் ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால் - ஒன்றிய அரசு மற்றொருபக்கம் நிதி ஒதுக்காமல் உபத்திரவம் செய்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து, நாம் எவ்வளவோ திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

என்னுடைய 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத தடையோ, எதிர்கொள்ளாத நெருக்கடியோ இல்லை. மிசாவையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். அரசியலில் எல்லா நெருக்கடிகளையும் – எல்லா எதிரிகளையும் – அவர்களின் சதி திட்டங்களையும் அவர்களோடு எதிர்த்துப் போராடியவன். அதையெல்லாம் முறியடித்துதான் இன்றைக்கு உங்களின் அன்போடு, உங்களுடைய ஆதரவோடு நான் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறேன். எல்லா வகையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் இங்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன்.

எதிர்க்கட்சிகளின் அவதூறாக இருந்தாலும், மத்திய அரசின் ஓரவஞ்சனையாக இருந்தாலும், ஆளுநரின் அடாவடியாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி நினைத்ததை செய்து முடிக்கும் துணிவும் – கொள்கை உறுதியும் - மக்களான உங்கள் ஆதரவும் எனக்கு இருக்கிறது. அந்த ஆதரவை எப்போதும் நீங்கள் தர வேண்டும் தர வேண்டும்.

இன்றைக்கு கும்பகோணத்தில் நம்முடைய கருணாநிதி பெயரால் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து