முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
ICC 2023 06 24

Source: provided

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும். 2025 முதல் 2027 வரை நடத்தப்படும் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இனிமேல் தலா 6 அணிகளாக இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் தொடரை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் ஒரு பிரிவாகவும், மீதமுள்ள 3 அணிகளுடன் மேலும் 3 அணிகள் சேர்க்கப்பட்டு 2ஆவது பிரிவாகவும் பிரிக்கப்படும். முதல் பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணி, அடுத்த முறை 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும். 2ஆவது பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி முதல் பிரிவுக்கு முன்னேறும். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். முன்னணி அணிகள் அடிக்கடி மோதிக்கொள்ளும். இதனால் வருவாய் அதிக அளவில் ஈட்டலாம் என்பது ஐ.சி.சி.-யின் திட்டம்.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான் 7ஆவது இடத்தில் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் முன்னணி அணிகளுடன் விளையாடாத நிலை ஏற்படும். இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்க்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றால் முழு உறுப்பினர் நாடுகளான 12 பேரில், 3-ல் 2 பங்கு உறுப்பினர் நாடுகள் ஆதரவு தேவை. "கிரிக்கெட் அதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் சொத்து அல்ல. சிறிய அணிகளுக்கு டாப் லெவல் போட்டிகளில் விளையாட தொடர்ந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முன்னேற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஹாக்கி 

போட்டியில் பாக். பங்கேற்கும் 

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடக்கிறது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியர் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று ஹாக்கி இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவருமான சேகர் மனோகர் கூறியதாவது:- பாகிஸ்தான் சீனியர் மற்றும் ஜூனியர் அணிகள் நிச்சயமாக இந்தியா வரும். அவர்கள் ஏற்கனவே விசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழுவுடன் விண்ணப்பித்துள்ளது.  உலக கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியை தயார்படுத்துவதற்கான பயிற்சி முகாம் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மணப்பெண்ணுக்கு தோனி அறிவுரை 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி  சமீபத்தில் அவர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது. மணமக்களுக்கு அருகில் நின்றபடி மைக்கில் பேசிய தோனி, "திருமணம் என்பது நல்ல விஷயம். நீங்கள் அவசரப்பட்டு அதை செய்து கொண்டீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்களில் மணமகனும் ஒருவர். எல்லோருமே இதே மாயபடகில் தான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியதும், விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

தொடர்ந்து பேசிய தோனி, 'நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. திருமணத்துக்குப் பிறகு அனைத்து கணவர்களும் ஒரே நிலையில்தான் இருப்பார்கள் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறிய அவர், பின்னர் மணமகனிடம் திரும்பி, "உங்கள் மனைவி வித்தியாசமானவர் என்று நினைத்தால் நீங்களும் தவறாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார். அதற்கு மணமகன், "ஆமாம் என்னுடையவர் வேறுபட்டவர் அல்ல என்றார். இதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இறுதியில் இருவருக்கும் சேர்த்து ஒரு ஆலோசனை கூறினார் தோனி, "சண்டை வந்தால் அமைதியாக இருங்கள். ஆண்கள் 5 நிமிடத்தில் அமைதியாகிவிடுவார்கள். அவர்களின் சக்தி அவர்களுக்குத் தெரியும்" என்றார். டோனியின் அறிவுரைகள் திருமணவிழாவை கலகலப்பாக்கியது.

கே.எல். ராகுலை வாங்க 

கொல்கத்தா அணி  ஆர்வம்

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் உறுதியானால், கேப்டன் பதவி கூட கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விருதுகளைக் குவிக்கும் மெஸ்ஸி

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார்.  கடைசி போட்டியில் மெஸ்ஸி விளையாட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய போட்டியில் மெஸ்ஸி கலந்து கொண்டார். நேற்று அதிகாலை நடந்த இந்தப் போட்டியில் அட்லஸ் அணியுடன் இன்டர் மியாமி அணி மோதியது. இதில் 2-1 என மியாமி வென்றது.

இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், 3 மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக்கியது என மெஸ்ஸி அசத்தலாக விளையாடினார். இந்தச் சிறப்பான ஆட்டத்துக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார். அத்துடன் இந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருதையும் பெற்றுள்ளார். கடந்த முறையும் மெஸ்ஸி இந்த விருதை வென்றிருந்தார். இந்தாண்டில் 18 போட்டிகளில் 18 கோல்கள், 7அசிஸ்ட்டுகளை செய்துள்ளார். இந்த விருது இந்த மாதத்தில் 5 போட்டிகளில் 8 கோல்கள், 3 அசிஸ்ட்டுகளை செய்ததிற்காக கொடுக்கப்பட்டதென எம்எல்எஸ் தெரிவித்துள்ளது. 

சிராஜ் 5 விக்கெட்டுகள் 

வீழ்த்துவார்: ஸ்டெயின் 

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்களாக ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு பதிலாக கருண் நாயர், துருவ் ஜூரெல், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் அடித்துள்ளது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் 2 ரன்களிலும், கே.எல்.ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டெயின், "5-வது டெஸ்டில் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து