முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தங்கி இருக்கும் வெளியாட்களை கைது செய்ய நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - கள்ள ஓட்டு போட சென்னையில் தங்கியிருக்கும் வெளியாட்களை கைது செய்ய தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டசபை தேர்தல் நாளை (13-ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துணை ராணுவ படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

234 சட்டமன்ற தொகுதிகளிலும் தங்கி இருக்கும் வெளியாட்கள் நேற்று மாலைக்குள் வெளியேற  வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை மீறி தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் தென்பட்டால் அவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை அழைத்து தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் யாராவது தங்கி இருந்தால் உடனடியாக வெளியேற சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளனர். 

நேற்று மாலை 5 மணிக்கு பின்னர் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமண மண்டபங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் ஆகியவற்றில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது வெளியாட்கள் தங்கியிருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

நேற்று மாலை 5 மணியில் இருந்து விடிய விடிய வாகன சோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  இந்த சோதனையின்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை மடக்கி அடையாள அட்டைகளை பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனையின்போது போலீசில் சிக்கும் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்