முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 75 ஆயிரம் போலீசார்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை அன்று பாதுகாப்பு பணிக்கு 75 ஆயிரம் போலீசார் 45 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டி.ஜி.பி. போலோநாத் கூறியுள்ளார். இது பற்றி நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி. போலோநாத் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 91 இடங்களில் உள்ளன. இம்மையங்களில் வாக்கு எண்ணும் பணிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத வகையில் விரிவான ஏற்பாடுகள் காவல்துறையால் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 13.5.2011 அன்று உள்ளூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைவீரர்கள், பயிற்சிகாவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துபடுவார்கள். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பேணிகாக்கப்படும். முழு அனுமதி நிலைநாட்டப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் வாயில் பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் அதிரடிப்படையினர் நிறுத்தபடுவார்கள். சட்ட ஒழுங்கு பிரிச்சனை எங்காவது ஏற்பட்டால் இவர்கள் உடனடியாக எதிர்கொள்வார்கள். சட்டம் ஒழுங்கிற்கு சிறு பாதிப்பு ஏற்பாடத வகையில் பதற்றம் மற்றும் சலசலப்புள்ள முக்கியமான பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார்கள். மேலும் ரோந்துபடை அனைத்து பகுதிகளையும் சுற்றியபடி கண்காணித்து வரும்.

அரசியல் கட்சி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஊர்காவல் படையினர் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வெடிகுண்டு மற்றும் வெடிமருந்து தவிர நாச செயல்களை முறியடிக்கும் வகையில் சிறப்பு காவலர்கள் மோப்ப நாய்களை கொண்டு மையங்கள் முழுவதுமாக சோதனை செய்வார்கள்.

மத்திய அரசின் ஆயுதபடையின் (17 இரயில்வே பாதுகாப்பு படை 10 (பிஎஸ்பி) எல்லை பாதுகாப்பு  படை) 27 பிரிவுகள் ஏற்கனவே வாக்கு எண்ணும் மையங்களில் முதல் அடுக்கு பாதுகாப்பினை அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் நாளைய தினம் (11.05.2011) கூடுதலாக மத்திய அரசின் தொழிற்சாலை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பிரிவுகள் வரவுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளியே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு எவ்வித வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.

ஒவ்வொரு மையத்திலும் மூன்று அடுக்கு கொண்ட தற்காப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் உள்ளூர் காவல்நிலைய காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் காவல் பணியில் இருப்பார்கள். அவர்கள் உள்ளே வருபவர்களின் அடையாள அட்டைகளை சோதனையிடுவார்கள். அவ்விடத்தில் வருவாய்துறை சார்ந்த துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவாயிலில் இரண்டாவது அடுக்கில் உள்ளூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆயுதபடையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் ஆகியோரால் பாதுகாப்பு தரப்படும். உள்ளே செல்ல அனுமதிகோரும் ஆண்களுக்கு ஆண்காவலர்களும், பெண்களுக்கு பெண் காவலர்களும் சோதனைக்கு பிறகு அனுமதி அளிப்பார்கள்.

மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு மத்திய அரசின் ஆயுதம் தாங்கிய படையினரால் வாக்கு எண்ணும் அறையின் நுழைவாயிலில் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் கைபேசிகள் மற்றும் புகைப்பட கருவிகள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இங்கு அதிரப்படையைச் சார்ந்த வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

இப்பகுதி முழுவதும் போதுமான அளவுக்கு வெளிச்சம் தரும் மின்விலக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அதை ஈடுசெய்ய மின்னாக்கிகள் தாயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எதிர்பாரத தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கவும் போதுமான எண்ணிக்கையில் போதுமான தீயணைப்பு கருவிகள் அறைக்குள் வைகக்ப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.

இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள அறிவுரைகளை வாக்கு எண்ணும் மையங்களில் குறைவின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணை தலைவர்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் காவள் ஆணையாளர்களும் கண்காணித்து உறுதி செய்வார்கள்.

தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கட்களும் பொதுமக்களும் வாக்கு எண்ணும் பணியை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்