முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.விற்கு மக்கள் இயக்கம் ஆதரவு

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.8 - உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மக்கள் இயக்கம் ஆதரவு அளிப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து மக்கள் இயக்கம் நிறுவனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிக்கை அறிவித்துள்ளார்.

விஜய்யின் வேண்டுகோளை ஏற்று கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அணியின் வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றி-மாபெரும் வெற்றிக்கு ஒரு சிறு காரணமாக இருந்தை நினைத்து மகிழ்ச்சியடைந்தோம்.

இப்போது வரும் உள்ளாட்சித் தேர்தலில் உங்களுக்கென்று உங்கள் ஊரிலே-பகுதியிலே ஒரு தனி அங்கீகாரம் வேண்டுமென்று ஆசைப்படும் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால் அந்த அங்கீகாரம் ஜெயலலிதா ஆசியோடு உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்று விஜய்யும், நானும் ஆசைப்படுகிறோம்.

அவ்வப்போது தேர்தலுக்கு தேர்தல் நாம் கொள்கையை மாற்றிக் கொண்டால் நாம் வாழ்கையில் முன்னேற முடியாது. உறுதியான ஒரே நிலைப்பாட்டோடும், தியாக மனப்பான்மையோடும் செயல்பட்டால்தான் நமது இலட்சியத்தில் வெற்றியடைய முடியும்.

உண்மையான தொண்டு உணர்வோடு உழைப்பவர்களுக்கு உயர்வும், பதவிகளும் தானே வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மேலும் நமது இயக்கம் ஒரு அரசியல் இயக்கமல்ல-தமிழ்நாடும், தமிழர்களும் நலமாக இருக்க வேண்டும் என்ற கனவோடு பணி செய்யும் ஒரு சமூக இயக்கமாகதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.

நாம் காணும் அதே கணவைதான் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தாய்மார்களின் வயிற்றில் பால்வார்த்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு லேப்டாப் அளித்து அவர்களின் கல்வி தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சொல்லாத பல திட்டங்களை அறிவித்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு ஜெயலலிதா தனித்துவ சக்திக்கு என்றும் உறுதுனையாக இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆகவே இம்மாதம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தன்னிச்சையாக வேட்புமனு செய்திருக்கும் நமது தொண்டர்கள் அனைவரும் அதிலிருந்து உங்களை விளக்கிக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அதிமுகவின் அமோக வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருச்சியில் நடைபெறும் இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு தீவிரமாக பணி செய்து வெற்றிப்பெறச் செய்ய வேண்டும். அதே நேரம் அந்த வெற்றிக்கு நீங்கள்தான் காரணம் என்ற தவறான மமதையோடு மார்தட்டிக் கொள்ளாமல், அந்த வெற்றியை கொடுக்கும் மக்கள் வெள்ளத்தில் உங்களையும் ஒரு துளி நீராக கலந்துக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் என்று உங்கள் விஜய் வேண்டுகோளின்படி நான் உங்களை அன்போடும், உரிமை.யோடும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்