முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாள்: 3 நாள் பொதுக் கூட்டங்கள்

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - தமிழக முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரின் 95-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் மற்றும் கேரள, புதுவை, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் 3 நாட்கள் பொதுக்கூட்டங்களை நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் ​ 17.1.2012 முதல் 19.1.2012 வரை நடைபெறும். அ.தி.மு.க. நிறுவன தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 95-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வருகின்ற 17.1.2012 முதல் 19.1.2012 வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளிலும்,  அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.  பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம்,  ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.1.2012 அன்று ஆங்காங்கே டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்