முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசோலா கால்நடைத் தீவன தனிச்சிறப்புகள்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

தாவரவியல் ரீதியாக அசோலா ‘அசோலேசியே’ என்னும் குடும்பத்தை சார்ந்த தண்ணீரில் மிதக்கும் ஓர் பெரணி செடி ஆகும். அசோலாவின் இலைகள் முக்கோண வடிவிலோ அல்லது பலகோண வடிவத்திலோ அமைந்து பார்ப்பதற்கு மூக்குத்தி மற்றும் கம்மல் போன்று இருப்பதால் இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என ஊர்புறங்களில் அழைக்கப்படுவதுண்டு. அசோலா மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய வேர்களையும் கொண்டது.

இதன் தண்டு மற்றும் வேர்ப் பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். அசோலாவின் உள்ளே ‘அனபினா அசோலே’ என்ற நீலப்பசும்பாசி உள்ளது. நீலப்பசும்பாசி வளர்வதற்கு தேவையான உண வினை அசோலா கொடுக்கிறது. இந்த நீலப்பசும்பாசி காற்றில் உள்ள தழைச் சத்தினை (நைட்ரஜன்) கிரகித்து அசோலாவில் சேமித்து வைக்கிறது. இதனால் அசோலா கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த சத்தான உணவாக பயன் படுத்தப்படுகிறது.

அசோலாவின் தனிச்சிறப்புகள்

1. அசோலாவை எளிய முறையில் உற்பத்தி செய்யலாம். துரித வளர்ச்சித் திறனும் கொண்டது.

2. அசோலாவை பசுமையாகவோ அல்லது உலர்த்தியோ கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.

3. அசோலாவில் 25-35 சதவீதம் புரதச்சத்து 10-12 சதவீதம் தாதுக்கள் மற்றும் 7-10 சதவீதம் அமினோ அமிலம் மற்றும் இதனை சார்ந்த வளர்ச்சிதை மாற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

4. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குiவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால் நடைத் தீவனமாக விளங்குகிறது.

5. அசோலா கால்டை மற்றும் கோழிகளின் உடல் நலத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களை கணிசமான அளவில் உள்ளடக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

அசோலா உற்பத்தி முறை :  அசோலா குறைந்த வெப்பநிலையில் (25 முதல் 31 சென்டிகிரேட்) வளரும் தன்மை கொண்டதால் நிழலில் வளர்க்க வேண்டும். மர நிழலில் வளர்க்கும் போது சூரிய ஒளியானது அசோலா மீது மூன்று மணி நேரத்திற்கு மேல் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

படி-1: நிலத்தில் உள்ள களைச்செடிகளை அகற்றி நிலத்தைச் சமப்படுத்த வும் பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி 10. செ.மீ. உயரம். 2.25 மீ நீளம், 1.5 மீ அகலம் வரும்படி செங்கலை அடுக்கவும். புல் பூண்டுகள் வளர்வதை தடுக்கவும், சிறு கற்களால் சில்பாலின் சீட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் யூரியா சாக்கினை குழியில் பரப்பவும்.

படி- 2: பின்னர் 2.5 மீ நீளம், 1.8 மீ அகலம் உள்ள சில்பாலின் சீட்டை செங்கலின் மேல் சமமாக பரப்பவும். (150 தடிமன்களுக்கு மேல் உள்ள சில்பாலின் சீட்டை பயன்படுத்தவும்).

படி-3: சில்பாலின் மீது சுமார் 30-35 கிலோ நன்கு சலித்த வளமான மண்ணை சமமாக பரப்பவும்.
படி-4: இருநாட்களுக்கு முந்தையதாக இல்லாத சாணம் சுமார் 4-5 கிலோ அல்லது அதே அளவான சாண எரிவாயுக்கலனில் இருந்து வெளிவரும் கழிவை, 15-20 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீர் கரைத்து குழியில் ஊற்ற வேண்டும்.

படி-5: அசோலா குழியில் 10 செ.மீ உயரம் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். இரசாயன கழிவுகள் இல்லாத கழிவுநீர் மற்றும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் அசோலா வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
படி-6: சுமார் 1-1.5 கிலோ நோய் இல்லாத, பூச்சித்தாக்குதல் இல்லாத அசோலாவை (இதை விதை அசோலா என சொல்லலாம்) எடுத்து தண்ணீரின் மேல் எல்லா இடங்களிலும் சமமாக பரவும்படி தூவவும். ஒரு சில அசோலா பெரணிகள் தலைகீழாக விழுந்து இருந்தால் அவற்றின் மேல் சிறிதளவு நீரை தெளித்தால் போதும். அவை நேராகி விடும்.
படி-7: அசோலா விதைத்த 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை தினந்தோறும் அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:- தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலி;த வளமான மண்ணை இட வேண்டும். அசோலா விதைகளை தவிர ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து இருபொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.

அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்:- 1 சதுர செ.மீ. துளை உள்ள பிளாஸ்டிக் டிரே கொண்டு அரித்து எடுத்த அசோலாவை பாதியளவு தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்டினுள் போடவும். பின்னர் சாணத்தின் வாசனை போகும் அளவு நன்றாக கழுவவும். அசோலாவை கழுவ பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் அசோலா பாதியிலேயே விட்டு விடலாம்.

இவ்வாறு நன்கு கழுவிய அசோலாவை 1:1 என்ற விகிதத்தில் செயற்கை தீவனங்களோடு கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கலாம். கோழி களுக்கு அசோலாவை அப்படியே உண்ண கொடுக்கலாம். இருந்தாலும் நாம் எப்போதும் கொடுக்கும் தீவனங்களோடு சேர்த்து கொடுக்க ஆரம்பித்து அவை பழக பழக தீவன அளவை குறைத்து அசோலா அளவைக் கூட்டிக்கொண்டெ வரலாம். கால்நடைகள் அசோலாவை நன்கு சாப்பிடப் பழகிய பின்னர் செயற்கைத் தீவ னங்கள் சேர்க்காமலேயே நேரடியாக அசோலாவையே கொடுக்கலாம்.

பரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிக்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு), பசுமாடு, உழவுமாடு -1.5 - 2 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி 20-30 கிராம், ஆடு -300-500 கிராம், வெண்பன்றி 1-1.5 கிலோ, முயல் 100 கிராம்,

பயன்கள் :  கறவை மாடுகளில் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்ப துடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலில் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் அளவும் 3 சதவீதம் வரை கூடுகிறது.

அசோலா உட்கொள்ளும் கால்நடைகள் மற்றும் கோழிகளின் எடை கூடுகிறது. கோழிகளின் முட்டையில் உள்ள மஞ்சள் கரு திடமாக காணப்படும்.

கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அசோலாவை தீவனமாக அளிக்கும் போது 20 விழுக்காடு வரை அடர் தீவனத்தை சேமிக்கலாம்.

அசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு :  பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.

தொகுப்பு : ஜெயந்தி, ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி, சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து