ஆந்திர மாநிலம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதியில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் சென்று வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தார். மேலும், சென்னையில் சட்ட பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
அதன் பின்னர், சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு மாநில கவர்னர் நரசிம்மன் மற்றும் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காரில் திருமலை சென்ற ஜனாதிபதி இரவு மலை கோவிலில் தங்கினார். இந்நிலையில், திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். மாலையில் திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.