முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறிமுதல் செய்த போதை பொருளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
EPS 2022-09-19

Source: provided

சென்னை : பிடிபட்ட ரூ. 360 கோடி மதிப்புள்ள கடத்தல் போதைப் பொருளின் முழு விவரம் கண்டறிய, உடனடியாக இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை அருகே கடந்த 27.11.2022 அன்று 360 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தவிருப்பதை கடற்படை போலீசார் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.  ஒரே நாளில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது என்றால், புழக்கத்தில் இருக்கும் போதைப் பொருட்களின் மதிப்பு ஒரு மாதத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டுமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

இதனால் மாணவர்களின் வாழ்க்கை சீரழிந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.  இந்நிகழ்வு தமிழகத்தில் நடந்தேறியுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகம் சர்வதேச போதைப் பொருள் சந்தையாக மாறி வருகிறதோ என்ற அச்சமும் எழுகிறது.

எனவே, பிடிபட்ட 360 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் என்ற போதைப் பொருளின் ஆரம்பத்தையும், முடிவையும் கண்டறிய, உடனடியாக இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை வசம் ஒப்படைத்து, தொடர்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தி.மு.க. அரசு தவறினால், மத்திய அரசு தலையிட்டு, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக மக்கள் நலன் வேண்டி மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து