முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி

புதன்கிழமை, 27 மார்ச் 2024      விளையாட்டு
Chennai-team 2024-03-27

Source: provided

சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சென்னை பேட்டிங்...

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். 

டேரில் மிட்செல்... 

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரகானே 12 ரன் எடுத்த நிலையில் வெளியேற, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி வந்த கேப்டன் கெய்க்வாட் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் வாணவேடிக்கை காட்டிய ஷிவம் துபே 23 பந்துகளில் 51 ரன் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து சமீர் ரிஸ்வி களம் இறங்கி 14 ரன்கள் எடுத்தார். முடிவில் டேரில் மிட்செல் 24 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

207 ரன்கள் இலக்கு...

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா, கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினார். இந்த ஜோடியில் சுப்மன் கில் 8 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து சகா 21 ரன்களும், அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 12 ரன்களும், டேவிட் மில்லர் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் 37 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஓமர் சாய் 11 ரன்னிலும், ரஷித் கான் 1 ரன்னிலும், ராகுல் தேவாட்டியா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

143 ரன்கள் மட்டுமே... 

முதலில் சாய் சுதர்சன் அடித்த பந்தை தவறவிட்ட ரச்சின் ரவீந்திரா, அதன்பிறகு அடுத்தடுத்து ஓமர்சாய், ரஷித்கான், தேவாட்டியா ஆகியோர் அடித்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார்.  முடிவில் ஜான்சன் 5 ரன்களும், உமேஷ் யாதவ் 10 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாகர், தேஷ் பாண்டே மற்றும் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பதிரனா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று ஐ.பி.எல். தொடரின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து