முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பட்டையுடன் வீரர்கள்

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      விளையாட்டு
Karufu 2025-06-13

Source: provided

குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா  விமானம்   பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  

இந்த நிலையில் , விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற விதமாக, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் .  மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

___________________________________________________________________________________________________

சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா உள்பட 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.  தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து 8 வீராங்கனைகளில் ஒருவராக இறுதி சுற்றுக்குள் நுழைந்த சம்ரா இறுதிப்போட்டியில் 453.1 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்த பந்தயத்தில் உலக சாதனையாளராக விளங்கும் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது சம்ரா இந்த ஆண்டு தொடக்கத்தில் பியூனஸ் அயர்சில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.  

மற்ற இந்திய வீராங்கனைகள் ஆஷி சோக்சி (589) 11-வது இடமும், அஞ்சும் மோட்ஜில் (586) 27-வது இடமும், ஸ்ரீயங்கா சடான்ஜி (582) 53-வது இடமும், நிஸ்சால் (580) 60-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இளவேனில் வெண்கலம் வென்றிருந்தார்.

___________________________________________________________________________________________________

விம்பிள்டன் பரிசு தொகை..?

லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 622 கோடி. இது, கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 35 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்.

முதல் சுற்றோடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 76 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். இதேபோல இரட்டையர், கலப்பு இரட்டையர், வீல்சேர், ஜாம்பவான்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பந்து 'பிட்ச்' ஆகும் இடத்தை எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க உள்ளனர்.

___________________________________________________________________________________________________

கருண் நாயருக்கு பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.  இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.  இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் , கருண் நாயரை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்புவது என்பது எளிதானது அல்ல. 

உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு ரன் குவித்துள்ளீர்கள் என்பது விஷயமல்ல. ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேராடி மீண்டெழும் மனப்பாங்கு தான் முக்கியம். அது தான் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

___________________________________________________________________________________________________

இந்திய அணியில் ராதா யாதவ் 

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இடம் பிடித்து இருந்த 20 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சுசி உபாத்யாய் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீராங்கனையை அறிவித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவை மகளிர் தேர்வு கமிட்டி மாற்று வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது. 

___________________________________________________________________________________________________

ஐ.சி.சி. பதிவு வைரல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா 138க்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி. அணி 2ஆம் நாள் முடிவில் 144க்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைனை ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் ரன் ஓடும்போது தெரியாமல் மோதினார். 

அடுத்ததாக ஆஸி. கீப்பர் அலெக்ஸ் கேரியை தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜா ரன் ஓடும்போது மோதினார். இந்த விடியோ காட்சிகளை ஐ.சி.சி. தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டபிள்யூ.டபிள்யூ.இ. ஒலியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக இரு அணிகளும் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

___________________________________________________________________________________________________

ஆலன் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி. (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்காக விளையாடும்  பின் ஆலன் அதிவேகமாக சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 269.08 ஆக இருந்தது.

எம்.எல்.சி. டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் பிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து பின் ஆலன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

___________________________________________________________________________________________________

தயாராகும் அஸ்டெகா மைதானம் 

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய எல்.இ.டி. திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், சி.சி.டி.வி.  கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும். இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து