முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு : துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

புதன்கிழமை, 23 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சட்டசபையில் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பாக ஜி.கே. மணி பேசிய நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி பேசியுள்ளார்.  ஏற்கெனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார். 

அதிலே அவர் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாகக் குறிப்பிடுகிற போது, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும் கேட்டிருக்கிறார்.  

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம். 

ஆகவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து