முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு : பாதிப்பு குறித்து பினராயிடம் கேட்டறிந்தார் பிரதமர்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கன மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்பு குறித்து நேற்று முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். 

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுபெற்றதால் மழையும் இடைவிடாது பெய்தது. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த பல வீடுகள் மண்ணில் புதைந்தது. பல வீடுகள் இடிந்து விழுந்தன.

மழையின் காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவும் மலை கிராமங்களில் இருந்த பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன. நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோட்டயத்தில் 14 பேரும், இடுக்கியில் 10 பேரும், திருவனந்தபுரம், பத்தினம்திட்டையில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்டு மண்ணில் புதைந்தவர்களை மீட்டு வருகிறார்கள். நேற்றும் மண்ணில் சரிந்த வீடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா? என்பதை கண்டறியும் பணி தொடர்ந்தது. இதற்கிடையே கேரளா முழுவதும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, மலம்புழா, பம்பை, நெய்யாற்றின்கரை அணைகளில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

பத்தினம்திட்டாவில் உள்ள காக்கி அணை நேற்று பிற்பகலில் திறக்கப்பட்டது. இதுபோல பம்பா அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 983.30 மீட்டராக இருந்தது. நேற்றும் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இடுக்கி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 2396.46 அடியாக இருந்தது. நேற்று காலையில் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தபடி இருந்தது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணைகளுக்கு வரும் உபரி நீரை திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று பிற்பகலிலும் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டன. ஏற்கனவே மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அணைகளின் உபரி நீரும் திறந்து விடப்பட்டால் ஆறுகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தரப்பில் இருந்து உடனடியாக செய்து தரப்படும் எனவும் கூறினார். மேலும் அவர் கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து