முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி.சி. ஆவணப்படத் தடைக்கு எதிரான வழக்குகளை பிப்.6-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. தயாரித்துள்ள ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்தக்கொள்ள சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலானா அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிஎல் ஷர்மா, மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர் பி.பி.சி. ஆவணப்படத் தடைக்கு எதிரான தங்களது பொதுநல மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மனுக்களை அடுத்த வாரம் திங்கள்கிழமை (பிப்.6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

வழக்கறிஞர் எம்எல் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தன்னிச்சையானது, அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பி.பி.சி. ஆவணப்பட இணைப்புகளுடன் பதியப்பட்ட ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் மற்றும் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுக்களும் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

என்.ராம் மற்றும் பிரஷாந்த பூஷனுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியு சிங், தகவல் தொழில் நுட்ப விதிகளின்படி அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு மனுதாரர்களின் ட்விட்டர் பகிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பல்கலைக்கழகத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அப்போதைய அம்மாநில முதல்வராயிருந்த நரேந்திர மோடியின் பின்னணி குறித்த ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பி.பி.சி. கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பி.பி.சி.யின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. என்றாலும், பி.பி.சி. ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பி.பி.சி. ஆவணப்படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதளப் பதிவுகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படம் குறித்து, பிரச்சாரப் படம் என்றும், காலனியாதிக்க மனநிலை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து