முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: மீறி பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை-அபராதம்: தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Satyaprata-Saku

சென்னை, முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. மீறி பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்ற தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தீவிர பிரசாரத்தில்... 

தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்,  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஓரிரு நாள்களில்...

“தேர்தல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது சி-விஜில் எனும் செயலியில் புகார் அளிக்கலாம். அந்த செயலியில் இதுவரை 4,169 புகார்கள் வந்தன.  அவற்றில் 3,350 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.  383 புகார்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டன.  மீதமுள்ள 34 புகார்கள் மட்டுமே தீர்க்கப்படாமல் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் பூத் ஸ்லிப் எனும் வாக்குச்சாவடி அடையாளச் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. தற்போது வரை 92.80 சதவீதம் அடையாளச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சீட்டுகள் இன்னும் ஓரிரு நாள்களில் கொடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள்... 

பார்வை மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளைச் செலுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அவர்கள் வாக்கு செலுத்த ஏதுவாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி வசதி உள்ளது. அதன்மூலம், அவர்கள் வாக்களிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. வாக்குப் பதிவு நிறைவடையும் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடையும்.  பிரசாரம் ஓய்ந்த பிறகு யாரும் எந்த வகையிலும் வாக்கு சேகரிக்க கூடாது.  

விதிகளை மீறினால்... 

பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும். வாக்காளர் அல்லாதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக்கூடாது.

ஆணையம் எச்சரிக்கை...

தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 6 மணி வரை மட்டுமே ஓட்டு சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மேல் பிரசாரத்தை பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் சிறை தண்டனை விதிக்கப்படும் 

அனைத்தும் தயார் நிலையில்... 

வாக்காளர்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.  இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான ‘எஸ்டிடி’ தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கான 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும்,  88,783 விவிபேட் (வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ காலமானதைத் தொடர்ந்து,  அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

ரூ.162.47 கோடி பறிமுதல்...

மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியான அறிக்கையில், 'தமிழகத்தில் இதுவரை ரூ.1284 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரொக்கம் ரூ.162.47 கோடி (வருமான வரித்துறையால் ரூ.83.63 கோடியும், பறக்கும் படையால் ரூ.78.84 கோடி) பறிமுதல் செய்யப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து