முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
amit-shah 1

Source: provided

புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இதையடுத்து 2-வது கட்டமாக  கடந்த 26-ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 1-ம் தேதி வரை இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இத்தகைய சூழலில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இண்டியா  கூட்டணி குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல்காந்தி  பிரதமராக இருப்பார்.

இண்டியா கூட்டணி கூறுவது போல், ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. 

கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைவர் கிடைத்ததன் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி கட்சிகள்  பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் உலகம் இந்தியாவை பார்த்து ஏளனம் செய்யும் மற்றும் நாட்டின் மரியாதை பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார் என்று கர்நாடக மாநிலம்  தாவணகெரேயில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஏற்கனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து