முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      தமிழகம்
stalin 2024-12-30

திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

3-வது கண்காட்சி...

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(டிச.27) தொடங்கி வைத்து பேசினார். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில், நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த வேளாண் கண்காட்சி, இந்த ஒரு ஆண்டில் மட்டும் எத்தனையாவது கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? மூன்றாவது கண்காட்சி.

விவசாயிகள் அலைய...

இன்றைக்கு, தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பல மணி நேர வேலைகளை, சில மணித்துளிகளில், பல நூறு நபர்கள் செய்கின்ற வேலைகளை, சில இயந்திரங்கள் செய்கின்ற அளவுக்கு, அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது! இந்த வளர்ச்சி, விவசாயிகளான உங்கள் கைகளில் வந்து சேர்ந்தால்தான், அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படி இருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி, விவசாயிகளான நீங்கள் அலையக் கூடாது என்று தான், உங்களைத் தேடி வந்து இந்த வேளாண் கண்காட்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கலந்துரையாடல்...

சரி, கண்காட்சி வைத்துவிட்டால் மட்டும் போதுமா. இதையெல்லாம் எளிமையாக புரிவது போன்று விளக்கி சொல்லி, இதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டாமா? அதற்காகத்தான், 13 தலைப்புகளில், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுக்கான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கருத்தரங்குகள் மூலமாக, புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அரசியல் செய்வார்கள்...

எதற்காக இத்தனையும் நாம் செய்கிறோம்? விவசாயத்தை நிலைபெற செய்யவேண்டும் என்பதற்காக செய்கிறோம். வேளாண் துறையும், உழவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளை களைந்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். நாம் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனே, வேளாண்மைத்துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம். சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்றுவார்கள்… ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராடவிடுவார்கள்… இன்னும் சிலர், விவசாயி வேடமிட்டு, அரசியல் செய்வார்கள்

குறுவை சிறப்பு தொகுப்பு...

கடந்த 5 ஆண்டுகளாக, மேட்டூர் அணையை, சரியான நேரத்தில் திறக்கிறோம். அதனுடைய 20 லட்சம் விவசாயிகள் பயனடைகின்ற வகையில், ரூ.481 கோடி செலவில், ‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ கொண்டு வந்திருக்கிறோம்! இந்த ஆண்டு, முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில், கார் - குறுவை - சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை ரூ.132 கோடியில் செயல்படுத்தியிருக்கிறோம்.

வேளாண் வளர்ச்சி திட்டம்...

கிராமங்களில், உழவுத் தொழிலை வலுப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து, ஐந்தாண்டு பெருந்திட்டமாக கொண்டு வந்ததுதான், “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!” 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகின்ற இந்த திட்டத்தால், 54 ஆயிரத்து 701 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

இலவச மின்சார இணைப்பு...

வேளாண் - உழவர் நலத்துறை சார்பில், செய்யப்பட்டிருக்கின்ற திட்டங்கள் பற்றியும், முன்னெடுப்புகள் பற்றியும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, அவர் ஒரு பெரிய பட்டியலையே விளக்கமாக வழங்கிவிட்டார்… அதிலிருந்து சிறியதாக தான் நான் இப்போது சொல்லியிருக்கிறேன்! அதில், முத்தாய்பான ஒரு விஷயம், இந்த 5 ஆண்டுகளில் புதிதாக, 1 லட்சத்து 82 ஆயிரம் புதிய இலவச மின்சார இணைப்புகளை வழங்கி, கூடுதலாக, 3.6 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.

32.81 லட்சம் ஏக்கரில்... 

உங்கள் விளைச்சலில் மட்டுமல்ல, உங்கள் துன்பத்திலும் துணையாக கூட நிற்பவர்கள் தான் நாங்கள். அதனால்தான், ஐந்தாண்டுகளில், இதுவரைக்கும் 32.81 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் சேதத்திற்கு, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து ரூ.31 கோடியே 76 லட்சம் நிவாரணமாக வழங்கியிருக்கிறோம். முக்கியமாக, 2024-2025-ஆம் ஆண்டில், வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கருக்கு நிவாரணத் தொகையாக, ரூ.289 கோடியே 63 லட்சத்தை, 3 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று 23-ம் தேதி நான் உத்தரவிட்டு தான், இந்த மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அத்துடன், இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களுக்கு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு துணையாக...

இப்படி, உழவர் பெருமக்களின் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் என்றைக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, உங்களுக்குத் துணையாக இருக்கும்.  அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வழங்காமல் நான் போகமுடியுமா? முடியாது. நீங்களே நினைப்பீர்கள், அரசு விழாவில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அரசு விழாவில் அறிவிப்பு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயிகளின் கண்காட்சியை, இங்கே மாநாடு போல, மாபெரும் விழாவாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து