முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்துக்கு மத்திய அரசு துணை போவதா? ராமதாஸ் கண்டனம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணை கட்டுவது குறித்த பிரச்சினையில் கர்நாடகத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். அரசியல் சட்டத்திற்கு எதிரான மத்திய அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் கர்நாடக அரசு கடைபிடித்து வரும் பிடிவாதப் போக்கால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முறையாக கிடைப்பதில்லை. காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை முழுமையாக வென்றெடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு கிடைக்கும் கசிவு நீரையும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக எல்லையில் உள்ள மேகதாது என்ற இடத்தில் பிரமாண்ட அணை ஒன்றை கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ள கர்நாடக அரசு, அதை செயல்படுத்துவதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்து விட்டால், அணை கட்டும் பணிகளை கர்நாடகம் தொடங்கிவிடும். இதை உணர்ந்ததால் தான் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் கடையடைப்பு, சாலை மற்றும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியதுடன், டெல்லி சென்று நாடாளுமன்றம் முன்பாக தொடர் உண்ணாநிலை போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
இதற்குப் பிறகும் தமிழக அரசு விழித்துக் கொண்டு மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தத்தை கொடுக்க மறுக்கிறது. கர்நாடகத்தை ஆளும் காங்கிரசும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் அரசியலில் எதிரெதிர் முனையில் இருக்கும் போதிலும், கர்நாடக மாநில நலனைக் காப்பதற்காக இரு கட்சிகளும் கைகோர்த்து செயல்படுகின்றன. அதன் ஒருகட்டமாக மேகதாது அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தடுப்பது ஆகியவை குறித்து கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் தில்லியில் உள்ள மத்திய உரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில் நேற்றும், நேற்று முன்நாளும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இக்கூட்டத்தின் உண்மையான நோக்கம் தெரிந்தோ, தெரியாமலோ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேக்கர், வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தை மதித்தும், எல்லா மாநிலங்களுக்கும் பொதுவாகவும் செயல்படுவோம் என்று வாக்குறுதி ஏற்ற மத்திய அமைச்சர்களான அனந்த குமாரும், சதானந்த கவுடாவும் தங்களது மாநிலத்திற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் செயல்படுவது முறையா? மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் பொறுப்பில் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேக்கர், ஒரு மாநிலத்திற்கு எதிராக ஏதோ ஒரு பொம்மை பெயரில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பது முறையா? தமிழக முதலமைச்சர் பதவிக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் என்று கூறப்படும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இக்கூட்டத்தில் அறிந்தோ, அறியாமலோ பங்கேற்றது தமிழகத்திற்கு செய்த துரோகம் அல்லவா? ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறியும், ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு எதிராகவும், செயல்படும் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, பிரகாஷ் ஜவ்தேக்கர் ஆகியோரை பிரதமர் பதவி நீக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், அதில் பங்கேற்கும் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி பிரச்சினை பற்றி வலியுறுத்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து