முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு சிறுசேரி சிப்காட் பூங்காவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன தரவு மையம் : முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், National Payments Corporation of India நிறுவனத்தின் மூலம்    500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு (Smart Data Centre) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். 

வேகமாக வளர்ந்து வரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் சாதகமான புவியியல் சூழல்,  மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைந்துள்ளதால், தகவல் மற்றும்  தொடர்பு தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளங்குகிறது. National Payments Corporation of India நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சில்லரைப் பரிவர்த்தனைகள் முதல் வங்கிகளுக்கு இடையேயான பணத் தீர்வுகள் வரை அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும்.  இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார்  நானூறு கோடி பரிவர்த்தனைகளைக்  கையாளுகிறது. 

இவற்றின் பொருளாதார மதிப்பு மாதத்திற்கு சுமார் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் ஆகும்.  இந்நிறுவனம், சர்வதேச அளவில் மிகப்பெரிய பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.  இந்நிறுவனத்தின் மூலம், சர்வதேச தரத்தில் எட்டு அடுக்கு பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகளுடன் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நவீன தரவு மையம் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதற்கு துணைபுரியும். சென்னை மாநகரத்தில்  நான்கு அடுக்கு தரத்துடன், முதல் தரவு மையமாக இது அமைக்கப்படவுள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தினை செயல்படுத்துகின்ற அனைத்து விதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்த தரவு மையம் உதவிபுரியும்.  சுற்றுப்புறத் தூய்மையை பாதிக்காத வண்ணம் (eco friendly) பசுமைக் கட்டட வரைமுறைகளின்படி இம்மையம் அமைக்கப்படவுள்ளது.  பொருட்களின் இணையம் (IoT) எனும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும்,   தங்குதடையற்ற தொடர்ச்சியான மின்சார இணைப்பு வசதிகளைக் கொண்டதாகவும்,  புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் வகையிலும் இத்தரவு மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் க.சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹன்ஸ்ராஜ் வர்மா, National Payments Corporation of India நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் டாக்டர் என்.ராஜேந்திரன் மற்றும் அரசு  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து