முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: வளர்ச்சி பணிகள் எதுவும் குறையாது: அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் உள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : தமிழக அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் வளர்ச்சி பணிகள் எதுவும் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைக்க அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், காவல்துறை தலைவர் மேற்கு மண்டலம் பெரியய்யா, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, சேலம் மாவட்டத்தில் நிலவி வரும் பிரச்சினை போன்றவை குறித்து ஆய்வு செய்தேன். இது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு தடையின்றி செல்கிறதா என ஆய்வு செய்தேன்.

அரசு அறிவித்த வழிமுறைகளை சரியாக செயல்படுத்தியதால் தற்போது சேலம் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 3 பரிசோதனை நடந்தது. 35 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறிந்து அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2539 பேருக்கு பரிசோதனை செய்து 14 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 1899 பேருக்கு பரிசோதனை செய்து 7 பேருக்கு அறிகுறி காணப்பட்டது. இதில் ஒருவர் குணமடைந்தார். மீதி 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 185 பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்தம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 939 பேருக்கு பரிசோதனை நடந்தது. இதில் 14 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 7,524 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 67 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 41 அரசு மருத்துவமனை மையங்களாகும். மீதி 26 தனியார் மையங்களாகும். ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை பரிசோதனைகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மருத்துவ குழுவினரின் பரிந்துரைப்படி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து