முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 6–ம் கட்ட ஊரடங்கு உத்தரவு 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. 

அதேநேரம் கொரோனா பரவலை தடுப்பதற்காக இம்மாதம் (ஜூலை) அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமிழகம் முழுவதும், எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (4-வது வாரமாக) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது நேற்று (25-ம்தேதி) நள்ளிரவு 12 மணி முதல் 27-ம் தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

இன்று முழு ஊரடங்கையொட்டி போலீசார் ஆங்காங்கே சோதனை சாவடிகளை ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை என்றால் மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால், நேற்றை அதனை வாங்க பொதுமக்கள் கடைகளில் திரண்டனர். 

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், காலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே மீன் வியாபாரம் செய்யப்படும் என்றும், சில்லரை மீன் விற்பனைக்கு தடை விதித்தும் மீன்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. அதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒலிபெருக்கிகள் மூலம் மக்களைக் கலைந்து செல்லும்படியும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க சொல்லியும் அறிவுறுத்தினர்.  பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட மீன் மார்க்கெட்டிலும் மீன் விற்பனை அதிகமாக இருந்தது.

பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்து வந்து மீன்களை வாங்கி சென்றனர்.  இதேபோல் ஆடு, கோழி விற்பனை செய்யும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

காலை 7 மணி முதலே பொதுமக்கள் இறைச்சி வாங்க வந்தனர். அவர்கள் கடைகளுக்கு வெளியே இடைவெளிவிட்டு நிற்க வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, ஒருவர் பின் ஒருவராக இறைச்சிகளை வாங்க அனுமதிக்கப்பட்டனர். 

இதேபோல் மளிகை சாமான், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து