முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் நிகழும் சாதிய துவேசம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது: சமூக நீதி காவலர் போல மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவது வெட்கக் கேடாகும்: அமைச்சர் பென்ஜமின் கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தி.மு.க.வில் நிகழும் சாதிய துவேசம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்றும், சமூக நீதி காவலர் போல மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவது வெட்கக் கேடாகும் என்றும் அமைச்சர் பென்ஜமின் தனது அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தி.மு.க.வில் தலை விரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

மேற்படி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத் தலைவரான தி.மு.க.வை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தான் உண்மை. இப்படி தீண்டாமை கொடுமைக்கு காரணமான தி.மு.க. பின்னணியை மறைத்ததோடு, சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டவரை காப்பாற்றுவதற்கும் பெரும் முயற்சி செய்துவிட்டு, இப்போது ஜனநாயகத்தின் இழி செயல் என்று அறிக்கை வெளியிட்டு ஆளும் இயக்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் நடத்த தி.மு.க. தலைவர் முயற்சித்திருப்பது பித்தலாட்டத்தின் உச்சமாகும். 

ஏற்கனவே நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று தயாநிதி மாறன் பட்டியலினத்து மக்களை இழிவு செய்த போது, அதற்கு ஒரு வரி கூட கண்டனம் தெரிவிக்காத திருவாளர் ஸ்டாலின், மருத்துவ சமுதாய மக்களை அம்பட்டையன் என்று இழி வசனம் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை கண்டிக்காமலும், விளம்பரத்திற்காக அவ்வப்பொழுது பொய் வழக்குகளை தொடுத்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கும் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நீதிபதிகளை தரக்குறைவாக பேசியதை கண்டிக்காமலும் கடந்து போன தி.மு.க. தலைவர் தற்போது சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமை செயலுக்கு யார் காரணம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளாமலே அ.தி.மு.க. ஆட்சி மீது பழிப்போட முயற்சித்திருப்பது அவரது அறியாமையையும், அரசியல் நமைச்சலையுமே காட்டுகிறது. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் அடையாளமாகும். இந்த இயக்கம் பெரியார் விளைந்த ஈரோட்டு சீமையில் செங்குந்த முதலியார்களும், வன்னியர்களும், கவுண்டர்களும் நிறைந்த பகுதியில் மிகமிக சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியை அமைச்சராக்கி சமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கமாகும்.

அது மட்டுமல்ல, நீர்த்தலமான திருவானைக்காவலும், பூலோகச் சொர்க்கமான திருவரங்கமும் இடம் பெற்ற திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற பொதுத் தொகுதியில் தன் பெயரிலேயே தலித் என்கிற அடைமொழியை சுமந்திருந்த மறைந்த தலித் எழில்மலையை  போட்டியிட வைத்து பாராளுமன்ற உறுப்பினராக்கி சமதர்மத்தை இந்த நாட்டுக்கே முன்மொழிந்த இயக்கமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். 

அது போலவே, தமிழக சட்டமன்ற பேரவையின் சபாநாயகராக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு உத்வேகம் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால், மாட்சிமை பொருந்திய சட்டமன்றத்தின் நடுவரான சபாநாயகரை இருக்கையில் இருந்து கீழே தள்ளிவிட்டு ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.வினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் தொடங்கி,  அம்மாவை தொடர்ந்து, தற்போது எளிமை சாமானியர் அண்ணன் எடப்பாடியார் வரை பட்டியலினத்து மக்களை பரிவோடும் பாசத்தோடும் முன் கொண்டு செல்வதிலும், அவர்களுக்கான சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட உரிமைகளை நிறைவாக வழங்கி தாழ்த்தப்பட்ட சமூகம்  தன் நிலையில் உயர்ந்திட எந்நாளும் உழைப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வெள்ளந்தி மக்களும் உளமாற அறிவார். 

மேலும், பொது வாழ்வில் பெண் இனத்திற்கு 50 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை வழங்கி, உள்ளாட்சிகள் தொடங்கி உள்துறை செயலாளர் வரை பெண்களுக்கு உயரிய மாடங்களை அமைத்துக் கொடுத்ததும் அ.தி.மு.க. தான். 

தமிழகத்தின் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பல்வேறு அரசாணைகளுக்குட்பட்டு இட ஒதுக்கீடு மற்றும் பாலின ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.   

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய கடமைகளை, முக்கியமாக ஊரக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வதிகளை ஏற்படுத்துவதில் தங்களது சீரிய கவனத்தை செலுத்தி வருகிறார்கள். 

இவ்வாறு கட்டாய கடமைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, கூட்டப்பட்ட  கூட்டத்தில்,  கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சியில் நடைபெற்றது போன்றதொரு கசப்பான சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாது இருக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.  

மேலும், கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சியில் தவறிழைத்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.   

கிராம ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சியை முன்னேற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், இது போன்றதொரு ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அகப்படாமல் ஒன்றிணைந்து செயல்படவும், மேலும், மற்ற ஊராட்சி அமைப்புகளிலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல், அவரவர்க்கு உரிய பணிகளை அரசு விதிகளுக்குட்பட்டு செய்யவும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு உரிய பயிற்சி மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சிகளும் வழங்கப்படும். 

மேலும், ஊராட்சி மன்றக் கூட்டங்கள் தொடர்புடைய அரசு விதிகளுக்குட்பட்டு முறையாக நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொருட்டு துறை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள்.  இவ்வாறு முறையாக ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடத்துதல், கண்காணித்தல், தவறு இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குதல் போன்றவற்றை செய்திட மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கழகமும் சரி, கழகத்தின் ஆட்சியிலும் சரி, ஒரு போதும் தீண்டாமை என்கிற இழி செயல் நிகழ அனுமதித்தது கிடையாது. அதே வேளையில், பிரியாணி கடையில் குத்துச் சண்டை போடுவது, பியூட்டி பார்லரிலும், தேங்காய் கடையிலும் பெண்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்துவது, சிக்கனில் எலும்பு இல்லை என்று உணவக சிப்பந்தியை அடித்து உதைப்பது என்றெல்லாம் அநாகரிகத்தின் உச்சமாகவும், சாதிய துவேசங்களின் மையமாகவும் தி.மு.க. தான் திகழ்கிறது. 

மேலும், ஒரு நிகழ்வாக தினசரி நாளிதழ் ஒன்றில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஸ்டாலினுடன் காணொலி காட்சியில் உரையாடியபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமாரை  தரையில் அமர்த்திய புகைப்படம் வெளிவந்து தி.மு.க.வில் நிகழும் சாதிய துவேசம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.  எனவே, இதையெல்லாம் மறைப்பதற்கு சமூக நீதி காவலர் போல மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவது வெட்கக் கேடாகும்.

நாகரிக உலகத்தில், இன்னும் காட்டு மிராண்டிகளாக நடந்து கொள்ளும் தன் கட்சியில் உள்ள தவறான பேர் வழிகளுக்கு பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளை அலங்கார நாயகன் ஸ்டாலின் காணொலிக் காட்சிகள் மூலமாவது போதிப்பது உத்தமம்.  அப்படி போதிப்பதற்கு முன்பு, அதனை திருவாளர் ஸ்டாலின் தானும் படித்து அறிந்து கொள்வது உத்தமத்திலும் உத்தமம் ஆகும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து