முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவி்ப்பு

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் என்பவரின் மகன் துரைசாமி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளூர் சரகம், விராலூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னமருது என்பவரின் மனைவி பொன்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கறம்பக்குடி வட்டம், மந்தக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அப்பாசாமி என்பவரின் மகன் முருகேசன் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன்கள் செல்வன் ஆகாஷ் மற்றும் செல்வன் சஞ்சய் ஆகிய இருவரும் வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாரதி நகரைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பாலாஜி ரயிலில் பயணம் செய்யும் போது, எதிர்பாராத விதமாக படிக்கட்டிலிருந்து தவறி  விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் மகன் சுதாகர்  சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த அந்தோணி லிவார்தன் என்பவரின் மகன் கார்சன் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற  செய்தியையும், 

பரமக்குடி வட்டம்,  டி. கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி மீனா எதிர்பாராத விதமாக தீ பட்டதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கழுநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த மருதையா என்பவரின் மனைவி துரைச்சி, முத்தையா என்பவரின் மனைவி பொன்னம்மாள் மற்றும் முத்தையா என்பவரின் மகன் மாடசாமி ஆகிய மூன்று பேரும் புல் அறுக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில்  உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி தங்கமணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

சத்தியமங்கலம் வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி  ரோஜாமணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், ருத்திரகோட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் செல்வன் யுகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருக்கழுக்குன்றம் வட்டம், எடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் செல்வன் செல்வகுமார்  நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், கந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராமன் என்பவரின் மகன்கள் செல்வன் மௌலீஸ்வரன் மற்றும் செல்வன் லித்திக் ஆகிய இருவரும் அவருடைய வீட்டின் அருகில் காற்று நிரப்பும் தொட்டி வெடித்ததில், இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,  செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், விளாகம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் செல்வன் ஜெயப்பிரகாஷ் என்பவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தாம்பரம் வட்டம், சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் செல்வன் சதிஷ் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், போடிப்பேட்டையைச் சேர்ந்த நதியா மற்றும் அவருடைய மகள்கள் செல்வி நவிதா, செல்வி அஸ்வினி ஆகிய மூன்று பேரும் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து