சென்னை - கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடனுடம், மருத்துவ குழுவினருடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி தளர்வுகளை அறிவித்து வருகிறார்.
அந்தவகையில் வரும் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தளர்வுகள் குறித்த அடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடையவுள்ள சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.