முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு: துணை சபாநாயகராக பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டார்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை நேற்று கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து சட்டப்பேரவை செயலரிடம் சட்டசபை தலைவர் பதவிக்காக அப்பாவு எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார்.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் பதவியேற்கவுள்ளார். இதே போல் துணை சபாநாயகராக பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக கடந்த 7-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார்.  சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். 

முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  இதன் பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

கொரோனா பரவல் காரணமாக தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கலைவாணர் அரங்கத்தை தேர்வு செய்து சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதனை பின்பற்றி 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நேற்று நடந்தது.  கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் 3-வது மாடியில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவருமே முககவசம் அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  நேற்று புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில்  சட்டப்பேரவை செயலரிடம் சட்டசபை தலைவர் பதவிக்காக அப்பாவு எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மாலை வரை மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வாகிறார்.  இன்று அவர் பதவியேற்கவுள்ளார். இதே போல் துணை சபாநாயகராக பிச்சாண்டியும் தேர்வாகிறார்.  புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல்வர்  மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்ட தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்கிறது. 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

நேற்றைய சட்டசபை கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோரை தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். 

சட்டசபை கூட்டத்தொடரை அடுத்து கலைவாணர் அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அரங்க வளாகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. அடையாள அட்டை இருந்தவர்கள் தவிர வேறு யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கலைவாணர் அரங்கத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து