முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
madurai-high-court-2022-08-18

Source: provided

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

தேனியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில், தன்னை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 75 - வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையிலும், சுதந்திரத்திற்காக அனைத்தையும் இழந்த சுதந்திர போராட்ட தலைவர்கள், குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக இன்றும் பார்க்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கவும் கோரியுள்ளார். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடனும், தகாத வார்த்தைகளை பேசியும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். வகுப்புகள் நடைபெறுவதற்கு இடையூறு செய்துள்ளார்.

இருப்பினும் நீதிபதி அறிவுறுத்தலின் பேரில், கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். மனுதாரர் ஏற்கனவே இரண்டு வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனை போதுமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது என நீதிபதி தெரிவித்தார். மேலும் தலைவர்களின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக ஏற்கனவே எழுந்த பல விவகாரங்களில், ஒன்பது தலைவர்களின் உருவப்படங்கள் பொது அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வைக்கப்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையும் உள்ளது. அதனடிப்படையில் தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறையிலும் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுவிட்டது. அது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாளர். சமூக நீதியின் அடையாளம். அவரது பங்கு ஈடு செய்ய இயலாது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். சென்னை சட்டக் கல்வியின் இயக்குனர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து