முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு : மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
Electronic-Machine 2023-10-

Source: provided

புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2வது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கு நவ. 17-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவ. 25-ஆம் தேதியும், தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நவ. 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 5 மாநிலங்களிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடியாகும். மிசோரமில் 77.04 சதவீதம், சத்தீஸ்கரில் 76.31 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 76.22 சதவீதம், ராஜஸ்தானில் 73.92 சதவீதம், தெலங்கானாவில் 70.60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் களமானது, பா.ஜ.க. - காங்கிரஸ் இடையிலான பலப்பரீட்சையாக கருதப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆளுங்கட்சியாக உள்ளன. தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி காணப்பட்டது. மிசோரமில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க. என பலமுனைப் போட்டி நிலவியது.

தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி, ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்துக்கு வர வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வும், சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆட்சியைத் தக்க வைக்கும். தென் மாநிலமான தெலங்கானாவில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும், மிசோரமில் தொங்கு பேரவை அமையக் கூடும் என்று வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன. இன்று வாக்கு எண்ணிக்கையையொட்டி, 4 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதமான நாளாக கருதப்படுவதாலும், அன்றைய தினம் பெருமளவில் மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வர் என்பதாலும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று தேவாலயங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இக்கோரிக்கையை முன்வைத்து, மிசோரம் முழுவதும் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மிசோரம் மாநிலத்திலும் இன்று நடைபெறவிருந்த வாக்கு எண்ணிக்கை, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு நாளை (திங்கள்கிழமை - டிச. 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து