முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே வேன் மீது பஸ் மோதியதில் 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், பிப்.21 - மதுரை அருகே ரிங்ரோட்டில் அதிவேகமாக வந்த தனியார் பஸ், ஆம்னி வேன் மீது மோதியதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்திட முடிவு செய்தார். இதற்காக மாருதி ஆம்னி வேனில் காரியாப்பட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு பயணம் மேற்கொண்டார். வேனில் டிரைவர் உட்பட 6 பேர் பயணம் செய்தனர். இவர்களது வேன் மதுரை அருகேயுள்ள ரிங்ரோட்டில் சம்பக்குளம்- கருவேலம்பட்டி விலக்கு அருகே சென்ற போது மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து விருதுநகர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் தனியார் பஸ்சின் அடியில் சிக்கிய ஆம்னிவேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் நடராஜன்(60), அவரது மனைவி(58), ராமசாமி(75), சுரேஷ்குமார்(32) மற்றும் டிரைவர் ராமலிங்கம் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்கள். விபத்து குறித்து தகவலறிந்த திருநகர் போலீசார் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்டநேர போராடி பின்னர் 5 பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபர் சுரேஷ்குமார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்திற்கு தனியார் பஸ்சின் அதிவேகமே காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்