முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாணவர் உட்பட 2 பேருக்கு வீரதீர விருது

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 20 - காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுமியை துணிச்சலுடன் காப்பாற்றிய தமிழக பள்ளி மாணவர் சுகந்தன்(16) உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 22 இளம் சாதனையாளர்களுக்கு வீரதீர செயலுக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது. 

குடியரசு தின விழா கொண்டாடப்படும் வரும் 26 ம் தேதிக்கு முந்தைய நாள் அவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்குவார். அதை தொடர்ந்து ராஜ்பத் சாலையில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது அமர வைக்கப்பட்டு அவர்கள் கவுரவிக்கப்படுவர். இது குறித்து செய்தியாளர்களிடம் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் செக்ரட்டரி ஜெனரல் கஸ்தூரி மொஹாபத்ரா கூறியதாவது, 

குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 22 பேரி ல் 4 சிறுமியர், 18 சிறுவர்கள் ஆவர். விருது பெறும் 22 பேரில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த சுகந்தனும் ஒருவர். மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவர் கடந்த 19 ம் தேதி கங்கையம்மன் பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். 

அங்கு எதிர்பாராவிதமாக 40 அடி ஆழம் கொண்ட ஆற்றில் மூழ்கிய எஸ். கிருத்திகா(16) என்ற சிறுமியை சுகந்தன் காப்பாற்றி உள்ளார். சுகந்தனின் அந்த வீர செயலை பாராட்டி அவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. விருதை பெறுவதற்காக தனது தந்தை ஈஸ்வரனுடன் சுகந்தன் டெல்லி வந்துள்ளார். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் டெல்லியில் 10 நாட்கள் தங்கியிருப்பர். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்திக்கவும், நகரை சுற்றிப் பார்க்கவும் அரசு விருந்தினர்கள் போல அவர்கள் அழைத்து செல்லப்படுவர் என்று கஸ்தூரி மொஹாபத்ரா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony