முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகால மரணமடைந்த 8 காவல்துறையினர் குடும்பங்களுக்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.- 11 - அகால மரணமடைந்த காவல்துறையினர் 8 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த பாலகிருஷ்ணன் 1.2.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த பன்னீர்செல்வம் 4.2.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த உதயகுமார் 4.2.2013 அன்று மேட்டுப்பாளையம் சாலையில், நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலை விபத்து ஏற்பட்டு, பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; வேலூர் மாவட்டம், திருவலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 5.2.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்; மதுரை மாநகர், மதிச்சியம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த பாண்டி 5.2.2013 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த குமாரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 6.2.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்; தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ரவிச்சந்திரன் 7.2.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;சென்னை பெருநகர காவல், ஆவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குப்பன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.2.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். காவல் துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் குப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் உதயகுமார், தலைமைக் காவலர்கள் பாலகிருஷ்ணன், ராஜா, பாண்டி மற்றும் முதல்நிலைக் காவலர் குமாரி ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலக் குறைவால் காலமான ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் குப்பன், தலைமைக் காவலர் ராஜா, முதல்நிலைக் காவலர் குமாரி, மாரடைப்பால் காலமான காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், சாலை விபத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் தலைமைக் காவலர் பாண்டி ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்