முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிமியா விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 20 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.21 - உக்ரைனின் கிரிமியாவை தனது பகுதியுடன் இணைத்துக் கொண்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரிமியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெருமளவிலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிரிமியா பகுதியில் உள்ள நிர்வாக அதிகாரிகள் துணையுடன் உடன்படிக்கை ஒன்றை ரஷ்ய அதிபர் புதின் ஏற்படுத்தியுள்ளார். விரைவில் ரஷ்ய நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, கிரிமியா பகுதி ரஷ்யாவுடன் இணைந்ததாக அவர் அறிவிக்க வுள்ளார்.

ரஷ்யாவின் இச்செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறிய தாவது: -

கிரிமியா விவகாரத்தில் புதின் தனது தரப்பு கருத்தைக் கூறி வருகிறார். ஆனால், என்னைப் பொறுத்தவரை புதினும், ரஷ்யாவும் வரலாற்றின் தவறான பக்கத்தில் இடம்பிடித்துள்ளனர் என்றே கருதுகிறேன். புதினின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த அதிருப்தியை அளித்துள்ளன என்றார்.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னே கூறும்போது, இந்த விவகாரத்தின் மூலம் ரஷ்யா மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. சட்டவிரோதமான முறையில் கிரிமியாவை இணைத்துக் கொண்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்படும் சூழ்நிலையை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார்.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கான காரணத்தை புதின் விளக்கினார்.

புதினிடம் பேசிய மன்மோகன் சிங், “இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாகவும், ராஜ்ஜிய ரீதியாகவும் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் நலனை பாது காக்கும் வகையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய தாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமையை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புவது குறித்து பேசினார்.

ஐரோப்பிய ஒன்றியம், கனடாவைத் தொடர்ந்து ஆஸ்தி ரேலியாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், விசா வழங்குவதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் விவகாரத்தில் முக்கிய பங்காற்றிய ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 12 அதிகாரிகள் மீது இந்த தடையை விதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

ரஷ்யாவின் செயலுக்கு நேட்டோ அமைப்பும், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுப் பிழை சரிசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதை வரவேற்க வேண்டும் என்று சோவியத் யூனியனின் கடைசி தலைவர் மிகைல் கார்பச்சேவ் கூறியுள்ளார்.

முந்தைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியே கிரிமியா. சோவியத் யூனியனில் ரஷியாவும், உக்ரைனும் அங்கம் வகித்தபோது, சோவியத் தலைவர் நிகிடா குருஷ் சேவ்வால் இந்த தீபகற்பம் ரஷியாவிடம் இருந்து உக்ரைனுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கு வலுவான காரணங்கள் வேண்டும். மேலும் இதனை ஐ.நா.வும் ஆதரிக்க வேண்டும். கிரிமியாவை ரஷியா மீண்டும் எடுத்துக்கொண்டது வலுவான காரணம் அல்ல. கிரிமிய மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றி பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது என்றார் அவர்.

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ரஷியாவின் கருங்கடல் படைப் பிரிவினரின் வசிப்பிடமாக கிரிமியா இருந்துவருகிறது. 1954-ல் இப்பகுதி உக்ரைனுக்கு சோவியத் தலைவரால் அளிக்கப்பட்டது. எனவே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்