முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் வசதிக்காக பம்பையில் புதிய பாதை

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை,டிச -2 - சபரிமலைக்கு வரும், பக்தர்கள் வசதிக்காக ரூ 1.45 கோடி செலவில், பம்பையில் புதியபாதை அமைத்து மனிதநேய சேவையை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்று, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்திற்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி புகழாரம் சூட்டினார்.இது குறித்த விபரம் வருமாறு:

கேரளமாநிலம் பம்பையில் அகில பாரத ஐயப்பா சேவாசங்கத்தினர் ரூ 1.45 கோடி செலவில், திருவேணி சங்கமம் முதல் கன்னி மூல கணபதி கோயில் வரை 1 1/4 கிலோ மீட்டர் வரை புதிய பாதையை ரூ 1.45 கோடி செலவில் செய்துள்ளனர். மேலும், சங்கத்துக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தையும் பாதை அமைத்து இலவசமாக வழங்கியுள்ளனர். இதனால் விழாக்காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

ஐயப்ப சேவாசங்கம் அமைத்துள்ள புதிய பாதையின் திறப்பு விழா திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழி காட்டுதலின் படி பம்பாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகிலபாரத ஐயப்ப சேவாசங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான தென்னாலா பாலகிருஷ்ணன்பிள்ளை தலைமை வகித்தார். கடவுள் வாழ்த்துக்கு பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம் நாயர் வரவேற்றார். சங்கத்தின் துணைத் தலைவர் டி.விஜயகுமார், விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். சங்கத்தின் வேலை அறிக்கையை சங்கத்தின் பொருளாளர் மோகன் கே.நாயர் வாசித்தார்.

விழாவை துவக்கி வைத்து கேரள அரசின் தேவசம்போர்டு மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார் உரை நிகழ்த்தினார்.

பின்னர் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரள மாநில முதல்வர் சங்கம் அமைத்த புதிய பாதையை திறந்து வைத்து விழா பேரூரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது. சபரிமலைக்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் எந்த ஊரிலிருந்து புறப்படுகிறார்களோ, அந்த ஊரிலேயே, அந்த நிமிடத்திலிருந்தே, பக்தர்களுக்கு செய்யும் சேவையை ஐயப்ப சேவாசங்கத்தினர் துவங்கி விடுகிறார்கள். இந்தியா முழுவதும் விரிந்து பரந்து இந்த அமைப்பு உள்ளது. கடந்த 66 ஆண்டுகளாக சபரிமலைக்கு வரும் ஐயப்பப்ப பக்தர்களுக்கு, தங்களது மனித நேயசேவையை சிறப்பாக செய்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ரூ 1.45 கோடியில் அமைக்கப்பட்ட இந்த சாலையை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐயப்ப பக்தர்களுக்காக, தன்னலம் கருதாமல் மனிதநேய சேவையை சிறப்பாக செய்து வரும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து, இந்த சேவை பல,பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் உம்மன்சாண்டி தனது விழாபேரூரையில் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து சேவாசங்கத்தின் நிலக்கல் முகாமையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஆண்டோ ஆண்டனி எம்.பி. ராஜூ ஆபிரகாம் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் வேணுகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழா இறுதியில், சங்கத்தின் சன்னிதான முகாம் அலுவலர் பரமக்குடி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இவ்விழாவில் தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன் முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

தொண்டர் படை முதன்மை தளபதி தலைமையில் தொண்டர் படையைச் சேர்ந்த தொண்டர்கள் வெள்ளை சீருடை அணிந்து அணிவகுப்பு செய்தனர். இவ்விழாவில் மாநில நிர்வாகி மற்றும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்