முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் எதிர்ப்பு அமைப்புகளுக்கு பணம்குறித்து நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச. 18 - கூடங்களு அணுமின் நிலையத்தை எதிர்த்து வரும் 6 அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணஉதவி கிடைத்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது என்றும், அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-​நாட்டின் மின் தட்டுப்பாட்டை போக்க நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட முதலாவது அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்குவதாக இருந்தது. அதற்குள் அணு உலையால் ஆபத்து என்று கூடங்குளம் பகுதி மக்களிடையே பீதி பரவியது. இதனால் அணுமின் நிலையம் செயல்பட எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அணுமின் நிலைய ஊழியர்களை தடுத்ததால் மின்சார உற்பத்தி தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படுவதை விரும்பாத சில வெளிநாட்டு சக்திகள் போராட்டத்தை தூண்டி விடுவதாகவும், சில அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மறைமுகமாக பணம் வருவதாகவும் புகார் கூறப்பட்டது. 

இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 6 அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததற்கான ஆதாரம் சிக்கி இருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் மத்திய மந்திரி நாராயணசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்குவது தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குழுவினருடன் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய பாதுகாப்பு நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சமரசம் ஏற்படவில்லை. அணுமின் நிலையத்தால் பொது மக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று  போராட்டக்குழுவினர் கேட்கவில்லை, அதற்கு  மாறாக அணுமின் நிலைய வரை படம், ரஷியாவுடனான ஒப்பந்த சரத்துகள், அணுமின் நிலைய செலவு கணக்குகள் போன்ற தேவையில்லாத கேள்விகளை கேட்டனர். ரகசியமாக பாதுகாக்க வேண்டிய விஷயங்களை போராட்டக்காரர்களிடம் தெரிவிக்க இயலாது. தேவையில்லாத கேள்விகளை கேட்டு  காலதாமதம் செய்வதையே விரும்புகின்றனர். இதனால்தான் உடன்பாடு ஏற்படவில்லை. 

அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்குழுவினர் மீது தமிழக போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்கின்றனர். மேல் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 6 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 பிரதமர் அறிவித்தபடி அடுத்த சில வாரங்களில் முதல் அணு உலை செயல்பட தொடங்கும்.   2​வது  அணு உலையில் மின் உற்பத்தி 6 மாதங்களில் தொடங்கப்படும். 2020​ம் ஆண்டில் இந்தியாவுக்கு 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இந்த கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்  கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி அசாம், ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் புதிய அணுமின் நிலையங்களை  ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. மேலும் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என முதல்​ அமைச்சர் ஜெயலலிதா  பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல்  மின்சாரம் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் கூடுதல் மின் சாரம் வழங்கப்படும். 

இவ்வாறு இவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்