முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமியார் ராம்பாலின் ரகசிய அறையில் ஆயுத குவியல்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

சாமியார் ராம்பாலை சிறையில் அடைக்க உத்தரவு.

சண்டிகர் - கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பாலின் ஆசிரமம், குளு குளு அறைகள், மசாஜ் படுக்கைகள், நீச்சல் குளம், பிரம்மாண்ட டி.வி. திரைகள், குண்டு துளைக்காத பூஜை அறை, உடற்பயிற்சிக் கூடம், நகைப் பெட்டகங்கள் என அரண்மனைக்கு இணையான சொகுசு வசதிகளுடன் சொர்க்கபுரியாக திகழ்ந் துள்ளது.
கடந்த 2006-ல் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக 43 முறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாமல் 3 முறை பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் முரண்டுபிடித்த ஹரி யாணா மாநில சாமியார் ராம்பாலை அந்த மாநில போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும் சாமி யாரின் ஆதரவாளர்களும் இடையே நடைபெற்ற ‘போரில்’ 6 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவரது ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8-ம் தேதி நடுத்தர வர்க்க குடும்பத்தில் ராம்பால் பிறந்தார். டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்த அவர் அந்த மாநில அரசின் நீர்ப்பாசனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார்.
தீவிர அனுமார் பக்தரான அவர் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஆன்மிகப் பாதைக்கு திரும்பினார். 1999-ல் சட்லக்கில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா பகுதிகளிலும் ஆசிரமங்களை அமைத்தார். இதில் சட்லக் ஆசிரமம், சண்டிகர்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 12 ஏக்கர் பரப் பளவில் 5 மாடிகளுடன் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ளது.
ஆசிரம வளாகம் முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு சாமியார் ராம்பாலுக்காக பல்வேறு தனி அறைகள் உள்ளன. அவற்றில் குளிர்சாதன வசதி, மசாஜ் படுக்கைகள், பிரம்மாண்ட டி.வி. திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆசிரமத்துக்குள் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளம், 24 குளிர் சாதன அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரமத்தில் 50,000 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு சமைக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சமையல் அறை உள்ளது. இங்கு ஒரு மாதத்துக்கு தேவையான சமையல் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக் கூடம் உள்ளது. ஆசிரமத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராம்பாலுக்காக பிரத்யேகமாக பூஜை அறை உள்ளது. இங்கு பெண் பக்தர்களுக்காக தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பூஜை அறை அருகே நகைப் பெட்டகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட மைதானம் உள்ளது. இங்குள்ள உயரமான மேடையில் குண்டு துளைக்காத கூண்டில் இருந்து ராம்பால் சொற்பொழிவாற்றுவார். அவரது உரையைக் கேட்க வசதியாக ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியில் செல்வதற்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள்ளார். அவரின் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது. ஆசிரமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் கதவுகள் உள்ளன. அதன்வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
ஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஹெல்மெட், கைத்தடிகள், கருப்பு நிற சீருடைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 2 டேங்க்குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் அனைத்திலும் தோட்டாக் கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. அங்கு சாமியாரின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன.
சிறிய ராணுவத்துக்கு தேவையான வகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியபோது, சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் ரகசிய ஆயுதக் கிடங்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், இதன்மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர். தற்போது சட்லக் ஆசிரமம் தற்போது பாலைவனம்போல் காட்சியளிக்கிறது, என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து