அகமதாபாத் : அகமதாபாத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முறைப்படி திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் மோதிரா விளையாட்டு மைதானம் கடந்த 2015-ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 49 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மெல்போர்ன் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட மைதானமாக உள்ளது. இதனை முறியடித்து மிகப் பெரிய மைதானமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது.
8 செ.மீ. மழை பெய்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டியை நடத்தும் வகையில் வடிகால் வசதி உள்ளது. மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மைதானத்தில் நிழல் விழாது. 4 டிரஸ்சிங் ரூம், நீச்சல் குளம், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த நிலையில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜ்ஜு மற்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி பூமி பூஜை செய்தனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.