முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் : சிவ சிவா முழக்கத்துடன் பக்தர்கள் வடம்பிடித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கடந்த 11-ம் தேதி நடந்தது. உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் வேதமந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடிட மேள தாளம் முழங்கிட கோவில் கொடிமரத்தில் கொடிறேற்றினார்.  இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உள் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து 12-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா, 13-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 14-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 15-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா, 16-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா, 17-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம்  இரவு தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக் குதிரையில் வீதி உலா நடைபெற்றது. 

இதனையடுத்து நேற்று (டிச.19) காலை 5 மணிக்கு மேள தாளம் முழங்கிட, தேவாரம், திருவாசகம் பாடிட, வேத மந்திரங்கள் ஓதிட சித்சபையில் இருந்து ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமிஅம்பாள் புறப்பட்டு கீழ வீதியில் உள்ள தேரடியில் தனித்தனித் தேர்களில் எழுந்தருளினர்.  இதனை தொடர்ந்து விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவா என்று முழங்கியவாறு தேர்களின் வடம்பிடித்து இழுந்தனர். 

தேருக்கு முன்னால் சிவானடியார்கள் ஆடிய வாறு சென்றனர். வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதியபடியே சென்றனர். கிழக்கு,மேல, தெற்கு, வடக்கு வீதிகள் வழியாக தேர்கள் சென்றது. அந்தந்த பகுதியில் கட்டளைதாரர்கள் சாமிக்கு படையல் செய்தனர். மேல வீதியும், வடக்கு வீதியும் இணையும் இடத்தில் பருவதராஜ குல மரபினர் ஸ்ரீநடராஜருக்கும், ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு வழக்கப்படி பட்டு சாத்தி படையல் செய்தனர். 

எஸ்.பி. சக்திகணேசன் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (டிச.20) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். நாளை 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உத்ஸவம் நிறைவு பெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து