முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டி சிறுமி நரபலி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.22 - வாடிப்பட்டி அருகே புதையல் எடுக்கும் ஆசையில் சிறுமி நரபலி வழக்கில் சம்பந்தப்பட்ட தந்தை, மகன் இருவரும் இறந்து விட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி.அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம்,  வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டியை சேர்ந்தவர் தொத்தன். இவரது மகள் ராஜலட்சுமி (5), கடந்த ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். கழுத்தறுபட்ட நிலையில் சிறுமியின் உடல், அருகிலுள்ள ஒரு வீட்டின் மாட்டுத்தொழுவத்தில் கிடந்தது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த மகாமுனி, அவரது மகன் மந்திரவாதி கருப்பு ஆகியோர் சேர்ந்து புதையல் எடுக்கும் ஆசையில் சிறுமியை நரபலி கொடுத்தது தெரியவந்தது. கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மகாமுனி உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே போல் வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது, கருப்பு தனக்கு தானே நாக்கை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து கருப்பு மீண்டும் தற்கொலைக்கு முயன்றதில் படுகாயம் அடைந்து இறந்தார். இந்நிலையில் மகாமுனியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளான தந்தை, மகன் இருவரும் இறந்து விட்டதால், மேற்கொண்டு வழக்கை கொண்டு செல்வதில் போலீசார் குழப்பம் அடைந்தார். வழக்கு கிடப்பில் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வழக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும், மேலும் சிலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்றும் நரபலி கொடுக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து டி.ஜி.பி.போலோநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யினரும் வழக்கு விசாரணையை துவங்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்