முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் சதிகாரர்களுடன் ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 14 - மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் நெருக்கமான உறவு இருந்தது என்பதை பாகிஸ்தானிடம் எடுத்துக்கூற இந்தியா முடிவு செய்துள்ளது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தூண்டிவிட்டவர்களுக்கும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பதை இந்தியா கண்டறிந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே நடந்துவந்த நல்லெண்ண பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயிருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இப்போது மீண்டும் இதே மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது மும்பை தாக்குதல் சதிகாரர்களுக்கும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிற்கும் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது என்பதை பாகிஸ்தானிடம் எடுத்துக்கூற இந்தியா முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான்-கனடியரான தகவூர் ராணா வழக்கில் இந்தியா தலையிடாது என்றும் கிருஷ்ணா கூறினார். இன்னொரு நாட்டின் வழக்கு விசாரணையில் இந்தியா தலையிடாது என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதல் சதிகாரர்களுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பதை சிகாகோ நீதிமன்றத்தில் தகவூர் ராணா தெரிவித்துள்ளார். இந்த நெருக்கமான தொடர்புக்கு தேவையான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்