முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 51 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

 ஸ்ரீநகர், வன்முறையால் உருக்குலைந்த காஷ்மீரில் 51 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. அந்த பள்ளத்தாக்கு பகுதியில் நிலைமை மேம்பட்டு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உயர்  மட்ட தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும்  பாம்போர் நகரிலும் நவ்கட்டாவில் இரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று டிரால் பகுதியின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து காஷ்மீரில் பிரிவினை வாதிகள் வன்முறை போராட்டங்களிலும், வேலை நிறுத்தங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இதுவரை 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். வன்முறையால் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என கடந்த 52 நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடை பிடிக்கப்பட்டது. அந்த உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. பாம்போர் நகர்(புல்வாமா மாவட்டம்) பகுதியிலும் நவ்கட்டாவில் இரு காவல் நிலைய பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.

சாலைகளில் போடப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் நேற்று காலை முதல் சாலைகளில் போக்குவரத்து தடையில்லாமல் நடந்தது. மக்கள் காலையிலேயே  கடைகளில் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை அதிக அளவில் திரண்டு வந்து வாங்கினர். லால் சவுக் பகுதியில், வாகனப்போக்குவரத்து  இயல்பாக இருந்தது. அந்த பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு வங்கிகள் உள்ளன.

தீவிரவாதி புர்கான் வானி  கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினை வாதிகள் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வரை வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்