முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்ச விவகாரம்: சாம்சங் நிறுவன தலைவர் விரைவில் கைதாகிறார்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

சியோல்  - தென் கொரியா அதிபரின் நெருங்கிய தோழிக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தலைவரிடம் நேற்று அரசு வழக்கறிஞர்கள் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

லஞ்ச குற்றச்சாட்டு
தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹேயின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில். இவர் அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும்தொகைகளை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிபரின் தொடர்பும் சந்தேகிக்கப்படுகிறது.

இடை நீக்கம்
இதன் காரணமாக பார்க் கியூன் ஹே, 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.  அவர் நிரந்தரமாக பதவியை இழப்பதா? அல்லது அதிபர் பதவியில் தொடருவதா? என்பது குறித்த விசாரணையை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரித்து வருகிறது.

22 மணி நேரம் விசாரணை
இதற்கிடையே, 2015-ம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது, அந்த நடவடிக்கையில் தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்து வரும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஜே ஒய் லீயை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் கடந்த 12-ம் தேதி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 22 மணி நேரம் நடந்தது.

விரைவில் கைது
இந்த விசாரணையின்போது லீ அளித்த வாக்குமூலத்தை இதர அரசு ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்த அரசு அதிகாரிகள் அவரை கைது செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை சியோல் மத்திய கோர்ட் வளாகத்தில் உள்ள ஒரு அறைக்குள் வைத்து ஜே ஒய் லீயிடம் அரசு வக்கீல்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, அவரை கைது செய்ய கோர்ட்டில் இருந்து ‘வாரண்ட்’ பெறுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தென்கொரியா ஊடகங்கள் யூகமாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்