முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 100 சித்தா, 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 100 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், ஒரு ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் மற்றும் 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மருத்துவ சேவை

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012ல் அம்மாவினால் துவக்கப்பட்டது. இவ்வாரியம் இதுவரை, 10,680 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் உட்பட 23,466 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களை தேர்வு செய்துள்ளது.

105 டாக்டர்கள்

தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 100 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், ஒரு ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் மற்றும் 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்கள், என 105 உதவி மருத்துவ அலுவலர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நல்லாசியோடு இன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகின்ற விதமாக மருத்துவர்கள் 105 பேருக்கு பணியாணை வழங்கப்படுகின்றது. தமிழகத்திலே பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, பாரம்பரிய முறையிலே சிகிச்சை மேற்கொள்வதற்காக சித்த மருத்துவர்கள் 100 பேர், 1 ஆயுர்வேதம் மற்றும் 4 ஹோமியோபதி என ஆக மொத்தம் 105 நபர்களுக்கு பணியாணை வழங்கப்படுகின்றது.

தமிழகம் முதலிடம்

தமிழகத்திலே பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை முறையாக வழங்கப்படுகின்றது. இந்தியாவிலேயே சுகாதாரத்திலே தமிழகம் முதலிடம் வகிக்கின்றது. ஆகவே ஜெயலலிதா அரசு, நோய் வாய்ப்பட்டிருக்கின்ற பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகின்றபொழுது நல்ல முறையில் சிகிச்சை அளித்து குணமடையக் கூடிய சூழ்நிலையில் இன்றைக்கு அரசு செயல்பட்டு வருகின்றது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி, பணியாணை பெறுகின்ற அனைத்து மருத்துவர்களும் சிறந்த முறையில் பணியாற்றி மக்கள் சேவை செய்ய வேண்டுமென்று வாழ்த்தி, இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெறுகின்றேன் என்று வாழ்த்தினார்.

இந்தநிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் (முழு கூடுதல்பொறுப்பு) க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஆணையர் (பொறுப்பு) மோகன் பியாரே, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வே.ராஜாராமன், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத், தேசிய நலவாழ்வு குழு திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து