முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு சேவையை செல்போன் மூலம் பெறும் மின்னாளுமை கொள்கை - முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு சேவைகளை செல்போன் மூலம் பெறுவதற்கான தொலைநோக்கு திட்டத்துடனான மின்னாளுமை கொள்கையை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதை உறுதி செய்திடும் வகையில், அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஒருங்கே கொண்டமின்னாளுமைக் கொள்கை 2017 முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.

தங்குதடையின்றி...

இந்த மின்னாளுமைக் கொள்கை, 2023-ம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வழங்குதல், பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற வழிவகை செய்தல் மற்றும் அரசின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரித்தல் ஆகியவற்றை தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது. மேலும், அரசுத்துறைகளின் மின்னாளுமை சிறப்பு முயற்சிகளுக்கென தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள விரிவான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பினை சீரான முறையில் பயன்படுத்திட வழிகாட்டுதலையும் வழங்கும். இதன் மூலம் அரசுத் துறைகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அரசின் சேவைகள் தங்குதடையின்றி மின்னணு முறையில் வழங்கிட இயலும்.

மேலும், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தர நிலைகள் மற்றும் கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டுள்ள இம்மின்னாளுமைக் கொள்கை, மின்னாளுமையில் மீத்தரவுகளுக்கான தரநிலைகள், திறந்தநிலை மென்பொருள்கள் பயன்பாடு மற்றும் தமிழ்க் கணினிப்பயன்பாட்டுத் தரநிலைகள் கணினி-மென்பொருள் - தரவு ஆகியவற்றிற்கு இடையேயான பொதுவான கட்டமைப்பு தரநிலைகள் பெயர்வுத்திறன், இயங்குதன்மை ஆகியவற்றை உறுதிசெய்யும்.

செலவினம் குறைப்பு

மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளைஒருங்கிணைந்த முறையில் அரசுத் துறைகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறன் அதிகரிப்பதுடன், கணினிப் பழுதுகளுக்கான செலவினமும் குறைக்கப்படும். மேலும், அரசுத் துறைகள் தங்களது ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக 0.5 சதவீதத்தை மின்னாளுமைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யவும், பின் படிப்படியாக அதை 5 ஆண்டுகளுக்குள் 3 சதவீதமாக அதிகரித்திடவும் இக்கொள்கை வழிவகை செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு). சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் ராமச்சந்திரன், மின்னாளுமை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் ஆனந்தராவ் விஷ்ணுபாட்டீல் இணை ஆணையர் ரமணா சரஸ்வதி மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து