முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி அணை கதவிலிருந்து நீர்க்கசிவு தொடர்பாக நான்கு அதிகாரிகள் இடை நீக்கம் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி தகவல்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கிருஷ்ணகிரி அணை கதவிலிருந்து நீர்க்கசிவு ஏற்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் எ.வ.வேலு கிருஷ்ணகிரி அணை கதவிலிருந்து நீர் கசிவு ஏற்பட்டது தொடர்பாக பிரச்சனை எழுப்பினார். இது குறித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

அவசர கால...

இந்த ஆண்டு பருவமழையின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளவை எட்டி முழு அளவில் நீர்த்தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 29.11.2017 அன்று பிற்பகல் 4.50 மணி அளவில், உபரிநீர்வழிந்தோடி கதவு எண்.1-ல் நீர் கசிய ஆரம்பித்தது. கதவினை ஆய்வு செய்தபோது, அதன் மேற்பகுதியும் மற்றும் மேலே தூக்குவதற்கும் கீழே இறக்குவதற்கும் பயன்படும் உருளைகள் அதன் வரித்தட சட்டத்தின் உள்ளேயே நல்ல நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. கதவின் இடப்பக்க அடிப்புறம் பாதிக்கப்பட்டு, மேற்புறமாக திருகி இருந்த காரணத்தினால் அதன் மூலம் நீர் கசிவது தெரியவந்தது. மேற்கொண்டு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அவசர கால நடவடிக்கையாக இதர உபரிநீர் வழிந்தோடிகள் மற்றும் ஆற்று மதகுகளின் மூலம் உபரி நீர்வெளியேற்றப்பட்டு அணை பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவரப்பட்டது. நீர்மாசுற்று அமில நிலையில் இருந்ததால் 60 ஆண்டுகளுக்கு முந்தையகதவுகளில் அரிப்பு ஏற்பட்டதே பாதிப்பிற்கு காரணம் என தெரிய வருகிறது.

9 ஏரிகளில் ...

அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினை வீணாக்காமல் கடலூர், மாவட்டத்திலுள்ள  9 ஏரிகளில் நிரப்பப்பட்டுள்ளன. அத்துடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய மலட்டாற்றில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுஅருகில் அமைந்த கிராமங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டிருக்கிறது. தற்காலிகமாக பாதிப்பு ஏற்பட்ட மதகு கதவினை சுமார் 12 அடி உயரத்திற்கு பொருத்தப்பட்டு தண்ணீரின் கொள்ளளவு 22.12.2017 முதல் 32 அடியிலிருந்து 44 அடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. (280மி.கன.அடியிலிருந்து 880.11 மி.கன.அடி) கிருஷ்ணகிரி நீர் தேக்க வரைவு அறிக்கையின்படி பாசனத்திற்கு ஜூலை முதல் நவம்பர் வரை 120 நாட்களுக்கு ஒரு போகத்திற்கு மட்டும் நீர் வழங்கமுடியும்.

நீர் வழங்க இயலும்

ஆனால் தற்போது போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கும் நீர் வழங்க உத்தரவிட்டு, அதன்பட12.11.2017 முதல் வாய்க்கால்களில் 180 கனஅடி வினாடி வீதம் இன்று வரை (10.1.2018) தொடர்ந்து விவசாயத்திற்கு பாதிப்பில்லாமல் பாசனத்திற்கு தண்ணீர்வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 524 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 257 கனஅடி வீதம் வந்து கொண்டிருப்பதால் தற்போது நடைபெறும் பாசனத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நீர் வழங்க இயலும். 19.12.2017 அன்று நிபுணர்கள் தளத்தினை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தளத்திலேயே நீரின் தன்மை ஆய்வு செய்யப் பெற்று அமில நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். நீர் மாதிரி மற்றும் பழுதடைந்த மேற்தகடினை ஆய்விற்காக உடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

விரிவான ஆய்விற்கு பின்னர் தகுந்த வகையான கூட்டுப் பொருள் மற்றும் மேற்பூச்சினை மதகுகதவிற்கு பயன்படுத்தலாம் என அறியப்பட்டு அணைக்கட்டில் உள்ள 8 உபரி நீர் கதவுகள் புதியதாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

மாற்ற நடவடிக்கை...

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டு இது குறித்து அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கேட்டார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக 4 அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கதவு சீரமைக்கப்பட்டு புதிதாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து