முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உறுதியாக எடுக்கும் தூத்துக்குடி கலெக்டர் தகவல்

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உரிய முறையில் உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த  22 ஆண்டு காலமாக இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற் சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், 24.3.2013 அன்று தொழிற்சாலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை அளிக்கப்பட்டு, பின்னர் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று  உத்தரவிட்டார்.  அதன் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மேற்கண்ட உத்தரவினை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகி, 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதி பெற்றது.  அதன் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013ல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.  மேற்படி வழக்கு விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் இதனை புதுப்பிக்க கோரிய போது, ஏற்கெனவே பிறப்பித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால்,  9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதனை நிராகரித்தது.  அன்று முதல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கவில்லை.

மேலும், 23.5.2018 நாளிட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பு 24.5.2018 அன்று அதிகாலை துண்டிக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் மின்சாரமும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் மூலமாகவே விநியோகிக்கப்படுவதால், தொழிற்சாலை எந்த விதத்திலும் தான் சுயமாக உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை உபயோகப்படுத்தவும் முடியாது; ஆலையை இயக்கவும் முடியாது. தொழிற்சாலை பயன்பாட்டிற்காக வழங்கப்படும் தண்ணீரும் நிறுத்தப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உரிய முறையில் உறுதியாக எடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து