முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மவுனமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: காங்.

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மீ டூ இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட விஷயங்களையும், தங்களை பாலியல் ரீதியாக சீண்டியவர்களையும் டுவிட்டர் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் மீது 6-க்கும் மேற்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர்கள் டுவிட்டரில் கடந்த ஒருவாரமாக பாலியல் புகார்களை அளித்தனர்.

ஆனால், கடந்த ஒருவாரமாக மத்திய அமைச்சர் அக்பர் வெளிநாடு பயணத்தில் இருந்ததால், அவர் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. மாறாக, பா.ஜ.க. தலைவர்களும், பிரதமர் மோடியும் கூட எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், ஆப்பிரிக்க பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய மத்திய அமைச்சர் அக்பர் விரைவில் உரிய விளக்கத்தை அளிப்பேன் எனத் தெரிவித்துச் சென்றார்.

இந்நிலையில், இந்தச் சூழலிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நிருபர்களுக்கு டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மீ டூ பிரச்சாரம் என்பது, பெண்களின் மரியாதை, மாண்பு, பாதுகாப்பு, சுயபாதுகாப்பு தொடர்புடையது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அக்பர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். மத்திய அமைச்சருக்கு இருக்கும் அதே பொறுப்பு, பிரதமர் மோடிக்கும் இருக்கிறது. பிரதமர் மோடி இந்த விஷயத்திலும் மவுனம் காக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் மவுனம் காக்கிறார் என்பதுதான் எங்களின் அடிப்படை கேள்வியாகும். உங்களின் கருத்துக்கள் என்ன என்பதை நாட்டு மக்களுக்குக் கூறுங்கள். பிரதமர் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் மோடி இருக்கிறார், ஆதலால் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர். இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து