முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணையாற்றின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை : சட்டசபையில் முதல்வர் எடப்பாடி விளக்கம்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பெண்ணையாற்றின் குறுக்கே போச்சம்பள்ளி அரசம்பட்டி கிராமத்திலும், பெண்டரஹள்ளி கிராமத்தில் தடுப்பணைகள் கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தி.மு.க உறுப்பினர் செங்குட்டுவன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

அரசாணை...

உறுப்பினர் செங்குட்டுவன் தங்களுடைய பகுதியிலே கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார். ஏற்கனவே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலே நாங்கள் அறிவித்தோம். அந்த அறிவிப்பின்படி, எண்ணெய்கோல் புதூர் அணைக்கட்டு பெண்ணையாற்றில் வரும் கூடுதல் வெள்ளநீரை, இந்த அணைக்கட்டின் இடதுபுறம் மற்றும் வலதுபுறத்தில் புதிய வாய்க்கால்கள் அமைத்து, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.72 கோடி செலவில் நிலம் கையகப்படுத்த 1.2.2018 அன்று அரசாணை வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆய்வு செய்யப்படும்...

ஆகவே, அங்கே இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று, இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றோம். நீங்கள் சில பகுதிகள் விடுபட்டதாக சொன்னீர்கள். அந்தப் பகுதியும் ஆய்வு செய்யப்படும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ரூ.8.5 கோடி செலவில்...

அதுமட்டுமல்லாமல், உங்களுடைய தொகுதியிலே பெண்ணையாற்றின் குறுக்கே போச்சம்பள்ளி தாலுகா, அரசம்பட்டி கிராமத்திலே ரூ.8.5 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, பெண்ணையாற்றின் குறுக்கே பெண்டரஹள்ளி கிராமத்தில் ரூ 8.5 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, விவசாய பெருமக்கள் அரசியலில் இருக்கின்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய கோரிக்கைகள் எல்லாம் ஏற்று, இந்த தடுப்பணையும் அம்மாவுடைய அரசால் கட்டித்தரப்படும். ஆகவே, அம்மாவுடைய அரசு எப்பொழுதும் விவசாயிகள் பக்கம் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து