முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட அ.தி.மு.க.வில் புதிய மாற்றம் : புதிய மாவட்ட செயலாளராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரை மாவட்ட அ.தி.மு.க.வில் புதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாக வசதிக்காக மதுரை மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு வருமாறு:

அ.தி.மு.க. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட அமைப்புகள், இன்று முதல் அமைப்பு ரீதியாக மதுரை மாநகர் மாவட்டம்’, `மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்’, `மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்’ என மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்வருமாறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

மதுரை மாநகர் மாவட்டம்

1. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி (194)
2. மதுரை மையம் சட்டமன்றத் தொகுதி (193)
3. மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி (192)

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்

1. மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி (191)
2. மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி (189)
3. மேலூர் சட்டமன்றத் தொகுதி (188)

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்

1. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி (196)
2. சோழவந்தான் (தனி) சட்டமன்றத் தொகுதி (190)
3. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி (195)
4. உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி (197)

இதன் அடிப்படையில், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் - வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வருவாய்த்துறை அமைச்சரும் அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து