முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் - மத்திய அரசு புதிய அறிவிப்பு

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சிறு வியாபாரிகளுக்கும் ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழ் ஜிஎஸ்டி வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களுக்கு, அவர்களது 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும்.   

பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன் பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. 12 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தால் பயன் அடைந்தனர்.

நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதுபற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 2 கோடி விவசாயிகள், அதாவது 15 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் கூடுதலாக நிறைய பேர் பயன்பெற கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் ரூ.10,774 கோடியில் செயல்படுத்தப்படும். சிறு விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும். மொத்தத்தில் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் 5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

ஓய்வூதிய திட்டத்துக்கு பதிவு செய்த விவசாயி திடீரென மரணம் அடைந்து விட்டால் அவரது மனைவி 50 சதவீத ஓய்வூதியத்தை பெற முடியும். பிரதான் மந்திரி கிசான் பென்சன் யோஜனா என்ற இந்த திட்டத்தில் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் தானாக முன் வந்து இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் குறித்து மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

விவசாயிகள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். விவசாயிகள் எவ்வளவு தொகை செலுத்துகிறார்களோ, அதே அளவுக்கான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை சரி செய்யவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

விவசாயிகள் போன்று சிறு வியாபாரிகளுக்கும் ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்துக்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு முதலில் ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டதால் 2019-2020ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.87,217 கோடி செலவாகும் என்று தெரிகிறது.  

இந்த திட்டத்தின் கீழ் கடைக்காரர்கள், சில்லரை வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் பயன் பெறலாம். ஜி.எஸ்.டி.யில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழ் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள வியாபாரிகள்தான் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.

அந்த பட்டியலில் உள்ள 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி பதிவு செய்த சிறு வியாபாரிகளுக்கு அவர்களது 60 வயதுக்கு பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். நாடு முழுவதும் 3 கோடி சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தின்படி பயன் பெறுவார்கள்.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் 5 கோடி சில்லரை வியாபாரிகள் சேர வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். சிறு வியாபாரிகள் தங்கள் ஓய்வூதிய திட்டத்தில் எந்த அளவுக்கு பணம் செலுத்துகிறார்களோ, அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து