முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

பிர்மிங்காம் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.  இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பின்னர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் 4 ரன்னிலும், ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டீவன் சுமித் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அலெக்ஸ் கேரி 46 ரன்னில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து ஸ்டோனிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும், கம்மின்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவன் சுமித் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டீவன் சுமித் 85 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் பெரேன்டோர்ப் 1 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. கடைசியில் நாதன் லயன் மட்டும் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், மார்கவுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைந்த இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து