முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 1,580 கோடி மதிப்பில் 2,213 புதிய பஸ்கள் வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் - முதல்வர் இ.பி.எஸ். முன்னிலையில் கையெழுத்தானது

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திடும் பொருட்டு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் ரூ. 1,580 கோடி மதிப்பீட்டில் 2,213 புதிய தரத்திலான பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கும் திட்டத்திற்கான உடன்பாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும், மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கிட வேண்டும் என்கிற உயரிய நோக்கில், லண்டன் மாநகர தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சி- 40 என்கிற பன்னாட்டு முகமைக்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும் கடந்த  2018-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களை கொண்டுள்ள இந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன் முன்னோட்டமாக, கடந்த 26.8.2019 அன்று தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதல் முறையாக சென்னை - மாநகர்போக்குவரத்துக் கழகத்திற்கான முதல் புதிய மின்சார பேருந்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 5,890 கோடி ரூபாய் செலவில் 12,000 புதிய பி.எஸ்.வி. தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சார பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்திடும் நோக்கில், முதற்கட்டமாக 1,580 கோடி ரூபாய் (203 மில்லியன் யூரோ) மதிப்பீட்டில்  2,213 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான திட்ட ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும், ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தானது. இந்த திட்ட ஒப்பந்தத்தின் மூலம், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறையின் செயல்பாட்டினை மேம்படுத்திட மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல் செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை நிறுவுதல், உலகத் தரத்திலான ஆலோசகர்களின் உதவிகளை பெறுதல், பணமில்லா பயணச் சீட்டு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்வின் போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிதித்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சென்னையிலுள்ள ஜெர்மன் நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் டெல்லியிலுள்ள கே.எப்.டபிள்.யூ வளர்ச்சி வங்கியின் துணை இயக்குநர் ஸ்வாதி கன்னா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து